அத்தியாயம் 15
வீட்டிற்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டவள் கண்களில் கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்தாள்.அவளுடைய மனக்கண்ணில் கண்களில் கொஞ்சம் கூட இளக்கம் காட்டாமல் ராட்சசன் போல மற்றவர்களை துவம்சம் செய்த பிரபஞ்சனின் ரௌத்திரம் நிறைந்த முகம் மட்டுமே தோன்றியது.பிரபஞ்சனிடம் அவள் பேசிப் பழகியது வெறும் நாட்கணக்கில் தான் என்றாலும் கூட அவனிடம் இருந்து இப்படி ஒரு செயலை அவள் நிச்சயம் எதிர்பார்த்து இருக்கவில்லை.
தன்னிடம் பேசும் பொழுது அவன் கண்களில் எப்பொழுதும் குறும்பை பார்த்து இருக்கிறாள்,காதலை பார்த்து இருக்கிறாள்.ஆனால் இன்று அவள் அவனிடம் பார்த்தது முழுக்க முழுக்க ஆத்திரம் மட்டுமே.அவனுக்கு இப்படி ஒரு முகம் இருக்கக் கூடும் என்று கனவிலும் அவள் எதிர்பார்க்கவில்லையே...சங்கமித்ராவின் மனம் வேகமாக கடந்த காலங்களை எண்ணத் தொடங்கியது.
அன்று அவனை போலீசில் ஒப்படைத்த பொழுது சிறுகாயம் கூட இல்லாமல் வந்து நின்றானே...அப்படி என்றால் ஒருவேளை அவன் ரௌடியாக இருப்பானோ என்று எண்ணத் தொடங்கினாள்.நேரம் போகப்போக அவனுடைய தைரியத்தை வைத்து நிச்சயம் அவன் ஒரு ரௌடியாகத் தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கும் அவசரப்பட்டு வந்தாள்.ஏற்கனவே பிரபஞ்சனின் அதிரடி செயலால் பாதிக்கப் பட்டு இருந்த அவளது மூளை அவளை ஒழுங்காக சிந்திக்க விடாமல் செய்தது.
அவளுக்கு ஏனோ பிரபஞ்சன் ஒரு போலீசாக இருக்கக்கூடும் என்ற எண்ணமே வரவில்லை.அவளுடைய தந்தை தர்மராஜைப் போல ஒட்ட வெட்டிய தலைமுடியும்,முறுக்கு மீசையும் இல்லாமல் போனது ஒரு காரணமாக இருக்கலாம்.அவளுடைய அருமைத் தந்தை என்றும் வீட்டில் கண்டிப்பும் கறாரும் நிறைந்தவர் என்றாலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் இப்படி வெறித்தனமாக யாரையும் அடித்து நொறுக்கி அவள் பார்த்தது இல்லை.
அவளுடைய தந்தை தர்மராஜை பொறுத்தவரையில் பொது இடத்தில் யாரையும் அவர் அடித்தது கிடையாது.அதை யாராவது பார்த்து விட்டு வத்தி வைத்து விட்டால் என்ன ஆவது என்ற பயம் தான் அதற்குக் காரணம்.ஆனால் இதற்கெல்லாம் பிரபஞ்சன் ஒருநாளும் பயந்தது கிடையாது.தப்பு என்று தெரிந்தால் யார் என்றெல்லாம் பார்க்காமல் அந்த இடத்திலேயே அடி பின்னி எடுத்து விடுவான்.இது எதையுமே தெரிந்து கொள்ளாமல் சங்கமித்ரா தன்னுடைய அறையில் அழுகையில் கரைந்து கொண்டு இருந்தாள்.
எதை நம்பி இந்த மூன்று நாட்களாக அவன் சொன்னபடி அவன் அழைத்த இடத்திற்கு போனோம்? அவன் அழைத்தது எல்லாம் பொது இடத்திற்குத் தான்.இந்த மூன்று நாட்களில் ஒருமுறை கூட அவன் வரம்பு மீறி நடந்து கொண்டதும் இல்லை தான்.ஆனால் இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் தான் எப்பேர்பட்ட ஒரு காரியத்தை செய்து இருக்கிறோம் என்று அவளின் மனசாட்சி அவளை கிழித்து கூறு போட்டது.
அன்னையும்,தந்தையும் தன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்து இருகிறார்கள்.அவர்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிய வந்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? கடவுளே என்னுடைய குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய அவப்பெயரை தேடித் தந்து இருப்பேன்.இந்த விஷயம் எல்லாம் தெரிய வந்தால் அப்பாவும் அம்மாவும் என்னை வெறுத்து ஒதுக்கி விடுவார்களே.குற்றவுணர்வில் மேலும் அவளை இம்சிக்க அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.
அவனைப் பற்றி எந்த விபரமும் தெரியாத பட்சத்தில் வெறுமனே அவன் பேச்சில் மயங்கி அவனுடன் தினமும் ஒரு மணி நேரம் கழிக்க ஒப்புக் கொண்டது இந்த நிமிடம் மிகப்பெரிய தவறாக தோன்றியது.இந்த விஷயம் மட்டும் அவளின் தந்தையோ தாயோ அறிந்தால் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்.இப்பொழுது இப்படி ஓடி வந்ததால் மட்டும் அவனிடம் இருந்து தப்ப முடியுமா?இல்லை அவன் தான் விட்டு விடுவானா? நிச்சயம் இல்லை.அவன் தன்னை விட மாட்டான்.என்று அவளது மனசாட்சி அவளுக்கு எடுத்து சொன்னது.
சத்யமித்ரா அறைக்குள் உறங்கிக் கொண்டு இருக்க,சாவித்திரியோ கிச்சனில் சமைத்து கொண்டு இருந்ததால் இவள் வீட்டிற்குள் நுழைந்ததை யாரும் கவனிக்கவில்லை.வெகுநேரம் அழுகையில் கரைந்தவள் போன் ஒலிக்கவும் எடுத்து யார் என்று பார்க்க பிரபஞ்சன் என்ற பெயரை பார்த்ததுமே அவள் உடலில் அப்படி ஒரு நடுக்கம் தோன்றியது.கைகளில் வைத்து இருந்த போனை தவற விட்டாள்.
விடாமல் ஒலித்த போன் பின் நின்று விட்டது.அதற்குப் பிறகும் கூட இரண்டு மூன்று முறை ரிங் முழுவதுமாக வந்து அவளால் எடுக்கப்படாமலேயே அணைந்து போனது.சில நிமிடங்களுக்குப் பிறகு மெசேஜ் வந்ததன் அறிகுறியாக மொபைல் லேசாக ஒரு நொடி அதிர்ந்து ஒலித்து பின் அமைதியாகி விட அவளுக்கு நன்றாக தெரிந்தது அது யாரின் மெசேஜாக இருக்கும் என்று.எனினும் அதை எடுத்துப் பார்க்காமல் இருக்க அவளால் முடியவில்லை.
பிரபஞ்சனின் அதிரடி தான் அவள் அறிந்த ஒன்றாயிற்றே.அவள் போனை எடுக்கவில்லை என்றதுமே நிச்சயம் அவனுக்கு கோபம் வந்து இருக்கும்.இப்பொழுது மெசேஜ் அனுப்பியும் பார்த்துவிட்டு பதில் அனுப்பவில்லை என்றால் நிச்சயம் வீட்டுக்கே வந்தாலும் வந்து விடுவான் என்று தோன்ற முயன்று தன்னை சமாளித்துக் கொண்டு மெல்ல கைகளில் மொபைலை எடுத்துப் பார்த்தாள்.
“ஏய் குஜிலி என்னடா பயந்துட்டியா? அது ஒரு சின்ன பிரச்சினைடா.நேரில் பார்க்கும் பொழுது மீதி விவரம் சொல்றேன்.இப்போ போனை எடுடா.ப்ளீஸ்!”
அவனுடைய மெசேஜை படித்து முடித்தவள் சற்று நேரம் மொபைலை வெறித்து நோக்கி விட்டு மீண்டும் மொபைலை எடுத்து கட்டிலில் போட்டாள்.ஐந்து நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் போன் அடிக்கவே எரிச்சலுற்றவள் போனை எடுத்து கட் பண்ணி விட்டு படுக்கையில் போட்டு விட்டு அப்படியே படுக்கையில் படுத்து கிடந்தாள்.மறுபடியும் மெசேஜ் ஒலி...
“ஏய்! குஜிலி போனை எடுடி...உன் குரலை கேட்கணும் போல இருக்கு.மாமன் பாவம்ல.இன்னைக்கு உன்னோட நேர்ல ஒரு வார்த்தை கூட பேச முடியலை. அட்லீஸ்ட் போன்லயாவது குரலை கேட்கலாம்னு பார்த்தா இப்படி பண்ணுறியே...போனை எடு குஜிலி.என்னை தவிக்க வைக்காதே”
அவனுடைய மெசேஜை படித்தவள் அதிர்ந்து தான் போனாள். ‘இப்படியே போனால் இவனுடைய பேச்சில் மயங்கி என்னுடைய கோபம் குறைந்து விடும் போலவே.’என்று நினைத்தவள் மொபைலை எடுத்து சுவிட்ச் ஆப் செய்து விட்டு படுத்து விட்டாள்.
படுத்தவளால் ஏனோ கண்களை சில நிமிடம் கூட மூடி உறங்க முடியவில்லை.மூடிய இமைகளுக்கு நடுவில் பிரபஞ்சனின் கோபம் கொப்பளித்த முகம் வந்து நின்று விளையாட்டு காட்டியது.என்ன முயன்றும் அவளால் அவனை ஒரு சாதாரணமானவனாக நினைக்க முடியவில்லை.
‘அவன் சண்டை போடுவதை நான் பார்த்த பிறகும் கூட அவனிடம் எந்த மாற்றமும் இல்லையே.நான் பார்த்து விட்டேன் என்ற பதட்டமும் இல்லை.எப்பொழுதும் போல சிரித்துக் கொண்டு தானே இருந்தான்.அப்படி என்றால் என்ன அர்த்தம்?இவள் பார்த்தால் நமக்கென்ன என்ற எண்ணமா? அல்லது இவள் எங்கே போய் விடப் போகிறாள் என்ற அலட்சியமா?’
வெகுநேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தவள் மதிய உணவு நேரத்தின் பொழுது தான் வீட்டில் இருந்தவர்களுக்கு தன்னுடைய இருப்பையே காட்டிக் கொண்டாள். சாவித்திரியும் மகளின் சோர்ந்த முகத்தை பார்த்தாலும் என்ன ஏது என்று விசாரிக்காமல் விட்டு விட்டார்.எல்லா விஷயமும் கணவருக்கு தெரிந்து தானே நடக்கிறது என்பதில் அவருக்கு கொஞ்சம் பயம் குறைந்து இருந்தது போலும்.
இரவு முழுக்க கணவனிடம் பேசி விட்டு பகலில் தூங்கிக் கொண்டு இருந்த சத்யமித்ராவை எழுப்பிய சாவித்திரி இருவருக்கும் சேர்த்து மதிய உணவை பரிமாறிக் கொண்டு இருந்தார்.இரவு முழுக்க கணவனோடு அரட்டை அடித்ததால் தூக்க கலக்கத்துடனே மதிய உணவை கொறித்துக் கொண்டு இருந்தாள் சத்யமித்ரா.சங்கமித்ராவோ அவளுக்கும் மேலே ஒருபடி போய் உணவை அளைந்து கொண்டு இருந்தாள்.
இருவரும் உணவு உண்ணும் இலட்சணத்தை பார்த்த சாவித்திரி வேகமாக வந்து சாப்பாடு மேசையில் ஒரு தட்டு தட்டினார்.
“ஏய்...இரண்டு பேரும் ஒழுங்கா சாப்பிடுங்க எதுக்கு இப்படி சாப்பிடாம உட்கார்ந்து இருக்கீங்க.ஒழுங்கா சாப்பிடுங்க...”என்று ஒரு அதட்டல் போட்டவர் மேசையில் நங்கென்று கரண்டியில் ஒரு போடு போட்டார்.அவர் போட்ட சத்தத்தில் அப்பொழுது தான் தூக்கத்தில் இருந்து விழித்ததை போல இரு பெண்களும் அதிர்ந்து போயினர்.
“ஏய்! ஏதாவது பேசிகிட்டே சாப்பிடேன் சங்கி...”கண்கள் தூக்க கலக்கத்தில் சொருக வேண்டா வெறுப்பாக உணவை உள்ளே தள்ளியபடி இருந்த சத்யமித்ரா தங்கையிடம் கேட்டாள்.
ஏற்கனவே உள்ளுர குழப்பத்திலும்,ஆத்திரத்திலும் இருந்த சங்கமித்ரா அந்த கோபத்தை எல்லாம் சத்யாவின் மீது காட்டினாள்.
“ஏய் வாயை மூடிக்கிட்டு பேசாம சாப்பிடு...உன் கூட பேசப் பிடிக்காமத் தானே உன் புருஷன் இந்தியாவில் வேலையே வேணாம்னு வெளிநாட்டில் போய் வேலை பார்க்கிறார்.உனக்கு பேச ஆள் கிடைக்கலைனா என் உயிரை வாங்குவியா.
சை!இந்த வீட்டில் ஒரு வாய் சோறு உருப்படியா சாப்பிட முடியுதா?ஒழுங்கா மரியாதையா கிளம்பி உன் வீட்டுக்கு போடி” என்று கோபமாக இரைந்தவள் சாப்பாட்டு தட்டை தள்ளி விட்டு அதே கோபத்துடன் அங்கிருந்து அகன்று விட்டாள். தங்கையிடம் இருந்து இப்படி ஒரு செயலை எதிர்பார்க்காத சத்யாவோ விக்கித்துப் போய் அமர்ந்து விட்டாள்.
அறைக்குள் நுழைந்து மீண்டும் கதவை சாத்திக் கொண்ட சங்கமித்ராவுக்கு துளியும் நெஞ்சம் அடங்க மறுத்தது.ஏற்கனவே தான் செய்து வைத்து இருக்கும் காரியத்தால் குற்ற உணர்வில் தவித்துக் கொண்டு இருந்தவளை இப்பொழுது பயமும் சேர்த்துப் பிடித்துக் கொண்டது.அவளுக்கு பிரபஞ்சனைப் பற்றி நன்கு தெரியும்.போனை அணைத்து வைத்து இருப்பதனால் மட்டுமே அவனிடம் இருந்து தப்பி விட முடியாது.நிச்சயம் அவன் தன்னை சந்தித்தே தீருவான்.வீட்டை விட்டு வெளியே போகாமல் இருந்தாலும் அவன் வீட்டிற்குள் வந்து தன்னை சந்திக்கவும் தயங்க மாட்டான் என்பதும் அவளுக்கு மேலும் அச்சத்தை கொடுத்தது.
அவனை ஒரேடியாக அலட்சியம் செய்யவும் முடியாது.அப்படி செய்தால் அவனுக்கு கோபம் இன்னும் அதிகமாக வரக்கூடும்.அதற்குப் பதில் அவன் மீண்டும் பேசினால் அவனிடம் தனக்கு அவனை பிடிக்கவில்லை என்று சொல்லி விட வேண்டியது தான் என்று அவசர முடிவொன்றை அவளது மனம் எடுத்தது.அவன் தான் ஏற்கனவே சொல்லி இருக்கிறானே இந்த மூன்று நாட்களுக்கு பிறகு அவளுக்கு தன்னை பிடிக்கவில்லை எனில் அதற்குப்பிறகு அவளை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று வாக்கு கொடுத்து இருக்கிறானே!என்றெல்லாம் எண்ணி மனதை சமாதானம் செய்து கொண்டவள் போனை எடுத்து ஆன் செய்து வைத்து அவனின் போனுக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.ஆனால் அவனிடம் இருந்து அதற்குப் பிறகு போன் வரவே இல்லை.
விடியும் வரை அவனது போனை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.அதே கவலையுடன் எழுந்து பல் துலக்கி விட்டு வெளியே வந்த பிறகு தான் வீட்டில் நடக்கும் களேபரத்தை உணர்ந்தாள்.அப்பொழுது தான் அவளின் நினைவுக்கு வந்தது அன்று அவளை பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடக்கப் போவது.
‘இப்பொழுது புதிதாக வருபவனை வேறு சமாளித்து ஆக வேண்டுமா?அலங்காரம் செய்து வேறு ஒருவன் முன்னே போய் தான் நிற்பதா? பிரபஞ்சனை தவிர வேறு ஒருவனின் கண்கள் என்னை ரசிப்பதா?’ அவள் மனம் முரண்டியது.ஆனால் என்ன சொல்லி மறுப்பது என்று அவளுக்கு தெரியவில்லை.ஏற்கனவே அவளிடம் சொல்லிவிட்டுத் தான் இந்த ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கிறது.இப்பொழுது கடைசி நேரத்தில் பிடிக்கவில்லை என்று சொன்னால் அவ்வளவு தான்! அப்பா அடித்தே கொன்று விடுவார் என்ற எண்ணம் தோன்ற வேண்டாவெறுப்பாக கிளம்பிக் கொண்டு இருந்தாள்.
காலை பத்து மணிக்கு வருவதாக சொன்ன மாப்பிள்ளை மதியம் இரண்டு மணி ஆகியும் வரவில்லை. சாவித்திரியும் தர்மராஜும் சோர்ந்து போய் அமர்ந்து இருக்க சங்கமித்ரா மகிழ்ச்சியாகவே இருந்தாள்.அதே நேரம் உள்ளூர சின்ன உறுத்தல் ஒன்று இருந்து கொண்டே இருந்தது.இந்த நிமிடம் வரை அவளுக்கு பிரபஞ்சனிடம் இருந்து அழைப்பு வந்து இருக்கவில்லை.
சிற்பம் செதுக்கபடும்...
கருத்துரையிடுக