அத்தியாயம் 6
இரவில் தூங்காமல் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தாள் மித்ரா. ‘சே!எப்படி ஏமாத்திட்டான்.நானும் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லாமல் அழுது வேறு தொலைச்சேனே.அந்த அளவிற்கா நான் பலகீனமா இருந்து இருக்கேன்.என்ன நினைச்சு இருப்பான் என்ன பத்தி.அத்தோடு மட்டுமா நிறுத்தினான்?என் பக்கத்தில் வந்து அமர்ந்ததை கூட நான் உணரவில்லையே...அவன் என்னை முத்தமிட்ட பொழுது ஏன் நான் சும்மா இருந்தேன்!அவனை ஏன் தடுக்கவே இல்லை?’ என்று பல சிந்தனைகளுக்குள் மூழ்கி இருந்தவள் சற்று நேரம் தோட்டத்தில் நடக்க எண்ணி அறையை விட்டு வெளியேறினாள்.
எப்பொழுதும் போல ஹாலில் அமர்ந்து கம்ப்யூட்டர் முன் அதி தீவிரமாக அமர்ந்து இருந்த சத்யாவை பார்த்ததும் சிரித்துக் கொண்டே அவளிடம் போய் நின்றாள்.
“என்ன அக்கா இன்னும் மாமா வரலையா? தூக்கம் வருதா ? நான் வேணா சூட காபி போட்டு தரட்டுமா?” அக்கறையாக விசாரித்தாள்.
“அதெல்லாம் வேணாம்.ஏற்கனவே நான் நேத்து நீ சொன்ன மாதிரி பேஸ்புக்ல அக்கௌன்ட் ஓபன் பண்ணினேன்.அவர் வர வரை இதுல கொஞ்ச இருக்கேன். நல்லா டைம் பாஸ் ஆகுது எனக்கு”.
“சந்தோசம்... பேஸ்புக்ல அக்கௌன்ட் ஓபன் பண்ற அளவுக்கு பெரிய ஆள் ஆகிட்டியா நீ?”
“ஏய் என்னடி நக்கலா? நான் எல்லாம் பேஸ்புக்ல அக்கௌன்ட் ஓபன் பண்ண கூடாதா?”
“ஏன் கூடாது தாராளமா செய்யலாமே? அறுபது வயசு பாட்டி எல்லாம் அக்கௌன்ட் வச்சு இருக்காங்க.உனக்கு என்ன நீ அரைக் கிழவி தானே...”சீண்டினாள் சத்யாவை.
“ஏய் யாரை பார்த்துடி அரைக் கிழவின்னு சொன்ன?”
“உன்னை பார்த்து தான் சொன்னேன்...அதுக்கு இப்ப என்னங்கிற?”
“அடியே எனக்கு இன்னும் இருபத்தி ஐஞ்சு வயசு கூட ஆகலைடி...என்னை அதுக்குள்ள கிழவி ஆக்கிட்டே”
“கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் பிறந்தாச்சு...இன்னும் உனக்கு குமரின்னு நினைப்பா?”
“அடியே...உன்னை” தங்கையை துரத்திக் கொண்டு அடிக்க ஓடினாள் சத்யா.
“நடுராத்திரியில் தூங்காம அக்காவுக்கும் தங்கச்சிக்கும் என்ன விளையாட்டு வேண்டி இருக்கு” என்று கேட்டபடியே அங்கு வந்தார் சாவித்திரி மித்ராவின் அம்மா.
“பாருங்க அம்மா...என்னை பார்த்து கிழவின்னு சொல்றா”தாயிடம் புகார் பத்திரம் வாசித்தாள் சத்யமித்ரா
“ஏன்டி ஏழு கழுதை வயசு ஆகுது இன்னும் என்ன சின்ன பிள்ளை போல விளையாடிக்கிட்டு ! போய் ஒழுங்கா தூங்கு போ”
“ஹா ஹா...அக்கா இதுக்கு நானே பரவாயில்லை.அம்மா உன்னை கழுதை ஆகிட்டாங்க.நானாவது கிழவின்னு தான் சொன்னேன்.அம்மா உன்னை கழுதை ஆகிட்டாங்க...அதுவும் ஒரு கழுதை இல்லையாம்...நீ ஏழு கழுதைக்கு சமமாம்.” என்று சொல்லிவிட்டு அடக்க மாட்டாமல் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள் சங்கமித்ரா.
அழுவது போல உதட்டை பிதுக்கி கொண்டு முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு இருக்கும் மூத்த மகளை பார்த்ததும் சாவித்திரி என்ன நினைத்தாரோ , “சரி சரி போய் படுங்க...” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.ஏதோ பேச வாயெடுத்த சத்யாவும் ஸ்கைப்பில் கணவனின் அழைப்பு வரவும் மற்றதை மறந்து கம்ப்யூட்டர்க்கு அருகில் போனாள்.
இருவரும் கிளம்பி விட மீண்டும் தனித்து விடப்பட்ட மித்ரா சத்தம் போடாமல் தோட்டத்திற்கு சென்று அங்கே இருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடத் தொடங்கினாள்.அவனை சந்தித்து இரண்டு நாட்களாக தான் சரியாக தூங்காதது அவளுடைய மனதை உறுத்தியது.
‘ஏற்கனவே வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள்.அதையே வேண்டாம் என்று மறுத்துக் கொண்டு இருக்கும் போது,இவன் வேறு எங்கிருந்து வந்தான் என்றே தெரியாமல் என் மனக் குளத்தில் கல்லெறிந்து அதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டானே...இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்.அவனை ஒதுக்கி விட்டு வீட்டில் பார்த்து இருக்கும் பையனை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?’.
இப்படி ஒரு எண்ணம் தோன்றிய வேகத்திலேயே அவளது மனது ஒரு நொடி அதிர்ந்தது. ‘யாரோ ஒருவனை ஒதுக்கி வைப்பதாக நினைக்க கூட தன்னால் முடியவில்லையே.இதற்கு என்ன அர்த்தம்.அவனை நான் நேசிக்க ஆரம்பித்து விட்டேனா?அது எப்படி சாத்தியம்?அவனை தான் வெறும் இரண்டு தடவை மட்டும் தானே சந்தித்து இருக்கிறேன்...ஹ்ம்ம் இது சரியில்லை.இப்படி மனது தறிகெட்டு போவது நல்லதுக்கு இல்லை’
இரவு வெகு நேரம் அவனைப் பற்றிய சிந்தனையில் உழன்றவள் விடியலின் அருகில் தான் உறங்கினாள்.நேற்றைய பொழுதை போலவே இன்றும் சரியாக தூங்கததால் அடித்து பிடித்து எழுந்தவள் அவசர அவசரமாக கிளம்பி வெளியில் வந்தாள்.அவளுடைய உள்மனது அடித்து சொன்னது இன்றும் அவன் வருவான் என்று.அவளது எண்ணத்தை பொய்யாக்காமல் பஸ் ஸ்டாண்டில் அவளுக்கு முன்னே சென்று காத்திருந்தான் பிரபஞ்சன்.
‘இவனை எப்படி அவாய்டு செய்வது’ என்று யோசித்துக் கொண்டே நடந்தவள் அவனை கண்டும் காணாதது போல அவனை தாண்டி பஸ் ஸ்டாண்டிற்கு போய் நின்றாள்.
“ஹாய் பேபி...நைட் நல்லா தூங்குனியா?முகத்தை பார்த்தா அப்படி தெரியலையே...நைட் புல்லா மாமனை நினைச்சுக்கிட்டு சரியாவே தூங்கலை போல...”கேலியாக பேசினாலும் அப்படித்தான் என்று உறுதியாக சொன்னான் பிரபஞ்சன்.
‘இவன் என்ன நேரில் பார்த்ததை போல பேசி வைக்கிறான்...’ என்று நினைத்தவள் ஒன்றும் பேசாமல் பஸ் வரும் திசையையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“நீ இப்படி எதுவுமே பேசாமல் அமைதியா இருந்தா நான் உன்னிடம் பேசுறதை நிறுத்தி விடுவேன்னோ இல்ல உன்னை பார்க்க வருவதையே நிறுத்தி விடுவேன்னோ எல்லாம் தப்பு கணக்கு போடாத செல்லம்.நீ என்ன செய்தாலும் நான் அதை ரசிக்கத் தான் செய்வேன்.”
விட்டால் இவன் பேசிக் கொண்டே இருப்பான் என்ற எண்ணம் வர , “இப்போ உங்களுக்கு என்ன தான் வேணும்?” எரிச்சலாக கேட்டாள் சங்கமித்ரா.
“நீ தான் வேணும்...நீ மட்டும் தான் வேணும்” அழுத்தம் திருத்தமாக சொன்னான் பிரபஞ்சன்.
‘இவனை’ என்று பல்லை கடித்தவள் , “சகிக்கலை” என்று வெளிப்படையாகவே எரிந்து விழுந்தாள்.
இதுக்கெல்லாம் அசருபவனா அவன் , “அப்படியா இருக்கு...இல்லையே செல்லம்.உன் முகம் அப்படியே பாலில் குளிப்பாட்டியதை போல அப்படியே பளபளன்னு இல்ல இருக்கு”ரசித்து சொன்னான்.
‘ஆண்டவா இவனிடம் இருந்து எப்படித்தான் தப்பிப்பதோ’ என்ற எண்ணம் தோன்றிய வேகத்தில் மறைந்தது.நேற்று மதியம் இவனை கடற்கரையில் பார்த்ததில் இருந்து தலையை போட்டு குடைந்து கொண்டு இருக்கும் கேள்வி தான் அதற்கு காரணம்.
‘இவன் எப்படி நேற்று அப்பாவிடம் இருந்து தப்பித்தான்?அதுவும் ஒரு சின்ன அடி கூட படாமல்’ என்ற சந்தேகம் , இப்பொழுது கொஞ்சம் கூட பயமே இல்லாமல் மீண்டும் அவளிடம் வந்து வம்பு இழுக்கும் இவனை பார்த்ததும் மீண்டும் தலை தூக்க அவனை நன்றாக நிமிர்ந்து பார்த்து பேசினாள் சங்கமித்ரா.
“நேத்து எப்படி என்னோட அப்பாகிட்ட இருந்து தப்பிச்சீங்க?” கூர்மையாக அவனை அளவிட்டவாறே கேட்டாள்.
“ஹா ஹா...என்கிட்டே பேசிட்டே...வெரி குட்...ஆனா கேட்ட கேள்வி தான் சரி இல்லை.”கண்களை மலர்த்தி குறும்பாக சிரித்தான்.
சங்கமித்ராவுக்கு உள்ளுக்குள் இந்த கேள்வி வண்டாக குடைந்து கொண்டு இருந்தது.இந்த கேள்வியை தன்னுடைய தந்தையிடம் அவள் கேட்டு விட முடியாது.இதற்கு பதில் தெரியாவிட்டால் அவளுடைய தலையே வெடித்து விடும் போல இருக்கவே முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
“சரி சரி...அப்படி பார்த்து வைக்காதே...மாமனுக்கு மனசு தாங்க மாட்டேன்ங்து...இப்போ என்ன உனக்கு நேத்து நான் எப்படி தப்பிச்சேன்னு தெரியனும்.அவ்வளவு தானே?சொல்றேன்.ஆனா இங்கே வச்சு இல்ல...பக்கத்தில் ஒரு காபி ஷாப் இருக்கு.அங்கே போய் ஒரு கப் காபி குடிச்சுகிட்டே பேசலாம்.சரியா?”
‘கொஞ்சம் இடத்தை கொடுத்தா இவன் மடத்தை பிடுங்க பார்க்கிறான்.அப்படி ஒண்ணும் அதை தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல’ என்று நினைத்தவள் கழுத்தை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு மீண்டும் பஸ் வரும் திசையை பார்க்க ஆரம்பித்தாள்.
“அடேங்கப்பா...பார்த்து...பார்த்து...இப்படி இன்னொரு தடவை செய்யாதே.உன் கழுத்து சுளுக்குமோ இல்லையோ மாமனோட மனசில சுளுக்கு விழுந்துடுச்சு...இதோ பார் பேபி.நானும் உன்கிட்டே தனியா பேசணும்னு தான் ரொம்ப முயற்சி பண்ணுறேன்.அது நடக்க மாட்டேன்ங்து.இப்ப நீயா என்கூட வந்தா பேச வேண்டியதை பேசி முடிச்சுட்டு நான் பாட்டிற்கு போய்டுவேன்.
இல்லேன்னா எப்படியும் மத்தியானம் நீ காலேஜ் சுவர் ஏறி குதிச்சு உன் பிரண்டோட வெளிய வருவ.அப்போ பார்த்து பேசிக்கிறேன்.எது எப்படி ஆனாலும் சரி.உன்னால் என்னை தவிர்க்க முடியாது.நீ என்கிட்டே இருந்து தப்பித்து எங்கேயும் ஓடி ஒளியவும் முடியாது.நான் உன்னை சந்திக்கணும்னும் முடிவு செஞ்சிட்டா அதை தடுக்க அந்த ஆண்டவனாலும் முடியாது.அதனால வீணே அலட்டிக்காம வந்து என் கூட ஒரு கப் காபி குடி”
“...”
“அப்படி நீ வந்தா நானும் நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன் . சரியா?”
‘பேசாமல் இவனுடன் போனால் தான் என்ன? இவன் தான் என் கேள்விக்கு பதில் சொல்றேன்னு சொல்றானே...போய் தான் பார்க்கலாமே.நான் என்ன தனி இடத்திற்கா இவனுடன் போகிறேன்.பொது இடம் தானே!அப்படியே எனக்கு திருமணம் முடிவு ஆகி இருக்கிற விஷயத்தையும் இவனிடம் சொல்லிவிட்டால் அதற்கு பிறகு இவனும் இப்படி என் பின்னால் வீணாக அலைந்து கொண்டு இருக்க மாட்டானே’ என்ற எண்ணம் தோன்றவும் சம்மதமாக தலை அசைத்து அவனுடன் சென்றாள் சங்கமித்ரா.
சிற்பம் செதுக்கப்படும்
கருத்துரையிடுக