எனை மீட்பாயோ காதலே அத்தியாயம் 1

 


மொத்த வீடும் திருவிழா கோலம் பூண்டிருந்தது. வீட்டின் இளவரசன் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வருகிறானே...

அடுப்படியில் நின்ற மங்களத்தின் குரல் தெருவரை  கேட்டது.

"எலேய்! சுப்பையா... இன்னிக்கு உன் சமையலை சாப்பிட்டு என் பேரன் மெய் மறந்து போய்டனும்... மறுபடியும் வெளிநாட்டுக்கு பறக்கணும்ங்கிற எண்ணமே அவனுக்கு வரக்கூடாது புரிஞ்சுதா?" வேலையாட்கள் எல்லாரையும் பம்பரமாய் சுற்ற வைத்துக் கொண்டிருந்தார்.

"அத்தை... சமையல் முடிஞ்சுதா... நான் போய் குளிச்சிட்டு , அலங்காரம் செஞ்சிட்டு  வந்திடறேன். சித்தார்த்க்கு நான் அப்படி இருந்தா தான் பிடிக்கும்"என்று வியர்வை வழிந்த முகத்தை துடைத்து கொண்டே அனுமதி கேட்டார்.

" நீ போய்ட்டு வா கௌரி... எல்லா வேலையும் தான் முடிச்சுட்டியே... " ஆதுரத்துடன் மருமகளைப் பார்த்தார்.

"இன்னும் நான் ஆரத்தி கரைச்சு வைக்கலை அத்தை..."என்றார் தயக்கமாக...

"அதனால என்னம்மா... நம்ம ஆனந்தியை விட்டு தயார் பண்ண சொல்றேன்"

"அத்தை... சீதா..."என்று இழுத்தார்.

"அந்த தரித்திரம் பிடிச்ச கழுதையை அவுட் ஹவுஸை விட்டு வெளியே வர கூடாதுனு நேத்தே மூஞ்சியில் அடிச்ச மாதிரி  சொல்லிட்டேன்... "

"அத்தை அவ பாவம்..."என்றார் தயக்கமாக

"அவ கழுத்தில் தாலி கட்டி முடிச்சதும் கோவிச்சுக்கிட்டு போன என் பேரன் இன்னிக்கு தான் வர்றான்... வந்ததும் அவ முகத்தில் முழிச்சா... மறுபடியும் கோபப்பட்டு கிளம்பி வெளிநாட்டுக்கே ஓடிடுவான்"

"ஒருவேளை சித்து வி... விவாகரத்து கேட்டா"

"யோசிக்காம உடனே வாங்கி கொடுத்துட வேண்டியது தான்" என்றார் தெளிவாக.

"...."  கண்களில் அதிர்ச்சியுடன் தன்னைப் பார்த்த மருமகளை இரக்கத்துடன் பார்த்தார் மங்களம்.

"நிலைமையை புரிஞ்சுக்க கௌரி... அவளுக்கு பாவம் பார்க்கிற சூழ்நிலையில் நான் இல்லை... எனக்கு என் பேரன் தான் முக்கியம். உனக்கும் உன் மகன் மட்டும் தான் முக்கியமா இருக்கணும்"என்றார் அழுத்தம் திருத்தமாகவே.

"சரிங்கத்தை..." என்றவர் அமைதியாக சென்று விட... மங்களம் பெருமூச்செறிந்தார்.

'அவ தலையில் என்ன எழுதி இருக்கோ'

அதே நேரம் அவுட் ஹௌஸில் தனியாக அமர்ந்திருந்த சீதா புடவை நுனியை விரல்களால் கோர்ப்பதும் பிரிப்பதுமாக இருந்தாள்.

'அடுத்து என்ன செய்யப்போகிறேன்' என்ற தவிப்பு அவள் முகத்தில் அப்பட்டமாக வழிந்தது.

வீட்டிற்குள் செல்ல கால்கள் பரபரத்தாலும் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கேயே அமர்ந்து இருந்தாள்.

காரின் ஹாரன் ஒலி கேட்டதும் தூக்கிவாரிப் போட... வேகமாக எழுந்தவள் யாரும் தன்னை சட்டென கண்டுகொள்ள முடியாத வண்ணம் ஜன்னலுக்கு அருகில் ஒளிந்து  நின்று வாசலை எட்டிப் பார்த்தாள்.

ஷூ அணிந்த அவனது கால்களை பார்த்ததும் பயத்தில் உடல் வெடவெடவென்று நடுங்க... வீட்டினுள் ஓடிப்போய் கதவை பூட்டிக் கொண்டாள்.

அவளது இதயத்தின் ஓசையே இடியோசை போல கேட்டு அவளை மிரட்டியது.

"சித்தார்த்" மெல்ல அவன் பெயரை சொல்லி பார்த்து கொண்டாள்.

அமைதியே உருவான புத்தரின் பெயரை இவனுக்கு வைத்து இருக்கிறார்கள். கசப்பான புன்னகை ஒன்று அவள் இதழின் ஓரத்தில் நெளிந்தது.

'பீமசேனன், கடோத்கஜன், குண்டோதரன் இப்படி ஏதாவது பேர் வச்சு இருக்கலாம் பொருத்தமா இருக்கும்' என்று எண்ணியவள் அப்படியே கதவில் சாய்ந்து அமர்ந்து விட்டாள்.

'இதோ இன்னும் சில நொடிகளில் தன்னை இந்த வீட்டை விட்டு அனுப்பி விடுவான்' என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க அவள் இருந்த அறைக்கதவு பலமாக தட்டப்பட்டது.

கதவை தட்டும் தொனியிலேயே வெளியே நிற்பது யார் என்று தெரிந்து போனது அவளுக்கு.

'இப்போ எதுக்கு இவன் இங்கே வந்து கதவை உடைக்கிறான். வீட்டுக்குள்ளே போக வேண்டியது தானே... ... என்னை வெளியே துரத்தின பிறகு தான் வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பாரோ துரை...' கழிவிரக்கம் மேலிட தாழ்ப்பாளை நீக்கி மிக லேசாக மட்டுமே கதவை திறந்தாள்.  அவள் கண்கள் அவனையும் தாண்டி அவனுக்கு பின்னால் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்த அவனது குடும்பத்தார் மீது பதிந்தது.

"பேராண்டி முதல்ல வீட்டுக்குள்ள போய் குளிச்சுட்டு சாப்பிடுய்யா... மத்த விவகாரம் எல்லாம் அப்புறம் உன் மனசு படியே பேசி பைசல் செஞ்சுக்கலாம்"பேரன் சண்டை போட்டு கை நீட்டி விடுவானோ என்ற பரிதவிப்பு மங்களத்தின்  குரலில் அப்பட்டமாய் தெரிந்தது.

"ஆமா சித்து கண்ணா.. முதல்ல வா வீட்டுக்கு போகலாம்... மத்ததை எல்லாம் பொறுமையாய் பார்க்கலாம்" என்று சொல்லி அவன் கையைப் பிடித்து லேசாக வீட்டின் புறம் இழுக்க முயன்றார் கௌரி.

எல்லாரும் மாற்றி மாற்றி பேசி அவன் மனதை கரைத்து அங்கிருந்து அப்புறப்படுத்த முயல, அவன் பார்வையோ சீதாவின் மீதே அப்பிக் கிடந்தது.

அவள் கண்கள் இன்னும் நிமிர்ந்து அவன் முகத்தை தீண்டவில்லை. அவன் பாதங்களிலேயே பதிந்து இருந்தது.

சட்டென அவளை நோக்கி முன்னேறி வந்தவன் யாரும் எதிர்பாரா விதமாக அவளது கைகளை பிடித்து தரதரவென இழுத்து வந்தான்.

வீட்டு வேலையாட்கள் உள்ளிட்ட எல்லாரும் பதைத்துப் போனார்கள்.

‘அப்படியென்ன இந்த பையனுக்கு அந்த பொண்ணு மேல கோபம்?’

“வீட்டை விட்டு கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிட்டு தான் உள்ளே போவாரோ’ ஆளுக்கொரு  சிந்தனையில் பதட்டதுடன் இருக்க சித்தார்த்தோ யாரையும் கருத்தில் கொள்ளாமல் அவளது கைப்பிடித்து வாசலில் அவனோடு சேர்த்து நிற்க வைத்தான்.

அங்கிருந்த ஒருவருக்கும் எதற்காக இப்படி நிற்கிறான் என்பது புரியாமல் முழிக்க, லேசான சலிப்புடன்  அவனது கரத்தை எடுத்து சீதாவின் தோளில் போட்டுக் கொள்ள, கௌரியின் முகமும் , மங்களத்தின் முகமும் பூவாய் மலர, சீதாவின் உள்ளமோ சருகாய் வாடியது.

“ஆனந்தி சீக்கிரம் என் பேரனுக்கும், பேத்திக்கும் ஆரத்தி எடு” மங்களத்தையும்  மீறி அவர் குரலில் மகிழ்ச்சி வெள்ளமாய் பாய்ந்தாடியது. நம்ப முடியாத ஆச்சரியம் நடந்தேறி விட்ட ஆனந்தம் அவர் குரலில்.

சீதாவோ அவன் கரங்களில் இருந்து விடுபட போராடிக் கொண்டிருந்தாள் யாரும் அறியாமல். தோளை அணைத்திருப்பவனுக்கு தெரிந்ததோ என்னவோ அவனது பிடி மேலும் இறுகியது.

யாரோ அவர்கள் இருவரும் வாசலில்  நின்ற கோலத்தை போனில் புகைப்படம் எடுத்தார்கள்.

ஆரத்தி எடுத்து முடித்ததும் பிடித்த பிடியை விடாமல் அவளை வீட்டினுள் அழைத்து சென்றான்.

“பூஜை அறைக்கு போய் இரண்டு பேரும் சாமி கும்பிட்டுட்டு போறீங்களா தங்கம்” பேரனின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார் மங்களம்.

“செய்யலாம் பாட்டி... கல்யாணம் முடிஞ்ச பிறகு இப்போ தானே இரண்டு பேரும் ஜோடியா வீட்டுக்கு வந்தோம். முறையா என்னவெல்லாம் செய்யணுமோ.. எல்லாத்தையும் செஞ்சிடுங்க...” என்று சொல்ல நம்ப இயலாமல் மொத்த குடும்பமும் ஆவென வாய் பிளந்து நின்றது.

இன்னும் சீதாவின் உடலில் நடுக்கம் நின்றபாடில்லை என்பதை உணர்ந்தவன் அவளை திரும்பி ஆழமாய் ஒரு பார்வை பார்த்தான்.

அவள் பார்வை இன்னமும் அவன் பாதத்தை தாண்டி உயரவே இல்லை.

“உன் பேரென்ன?” அவளையே அழுத்தமாய் பார்த்தபடி கேட்க... அவளை முந்திக்கொண்டு பதில் சொல்ல முன் வந்தார் மங்களம்.

“அவ பேரு...” பாட்டியை தன்னுடைய கை அசைவில் தடுத்து நிறுத்தினான் அவன்.

“எனக்கு ஊமைப் பொண்ணையா கட்டி வச்சீங்க பாட்டி...” மங்களம் திருதிருக்கவும் அவனது பார்வை மீண்டும் அவள் மீது அழுத்தத்துடன்  படிந்தது.

வேலையாட்களை கண் அசைவில் அப்புறப்படுத்தியவன் யாரும் அறியாமல் அவளது கையை லேசாக அழுத்த, பன்னீர் பூக்கள்  வாய் திறந்ததைப் போல அவனுக்கு பதில் சொன்னாள்.

“சீதா... சீதாலட்சுமி”மென் பூவாய் வருடிய அவள் குரலை முதன்முறையாக கேட்கிறான் சித்தார்த்.

‘சீதா’ தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

“சித்தார்த்... சீதா... பேர் பொருத்தம் கூட அருமையா இருக்கு தானே கௌரி...” மருமகளையும் தன்னோடு கூட்டு சேர்த்துக் கொண்டார் மங்களம்.

பாட்டியை நன்றாக திரும்பி முறைத்தவன் அன்னையின் பக்கம் பார்வையை செலுத்தினான். கண்களில் கண்ணீர் நிரம்பி வழிய மகிழ்ச்சியுடன் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். அன்னையின் பார்வையில் ஒரு நொடி தடுமாறியவன் உடனே தன்னை சமாளித்துக் கொண்டு அவரைப் பார்த்து இயல்பாய் புன்னகைத்து கண்களால் தைரியம் சொன்னான்.

அதுவே கௌரிக்கு பெரும் தெம்பைக் கொடுத்தது.

‘இனி மகன் பார்த்துக் கொள்வான்.’ என்ற எண்ணமே இதுவரையில் அவருக்கு இருந்த எல்லா கலக்கத்தையும் ஓட்டி விட்டது.

யாரோ அவர்கள் இருவரையும் சேர்த்து எடுத்த போட்டோவை வீட்டில் எல்லாருக்கும் காட்ட, சித்தார்த் அதை வாங்கிப் பார்க்க... இயல்பாய் அவள் பார்வையும் அதன் மீது பதிந்தது.

மல்யுத்த வீரனின் தோளில் அமர்ந்திருக்கும் கிளி போன்றதொரு தோற்றம். ஓங்கு தாங்காக வகை தொகை இல்லாமல் வளர்ந்து உடம்பை வளர்த்து வைத்திருந்த அவனுக்கு பக்கத்தில் ஒல்லியான உடல்வாகுடன் இருந்தவளை பார்த்ததும் உதட்டை லேசாக சுளித்தாள் அவள்.

‘நல்ல ஜோடி பொருத்தம்’

அதே எண்ணம் தான் அவனுக்கும் தோன்றியதோ என்னவோ அவளது உடலையே பார்வையால் அளந்தான். அவன் பார்வை வீச்சை தாங்க முடியாமல் மேலும் தலையை குனிந்து கொண்டவளைப் பார்த்ததும் அவன் கண்களில் ஏதோவொன்று வந்து போனது.

திருமணம் ஆன புதுமண தம்பதிகள் செய்ய வேண்டியது அனைத்தையும் செய்து முடித்தவன் பாட்டியின் புறம் திரும்பினான்.

“சாப்பிட என்ன மெனு பாட்டி”

“எல்லாம் உனக்கு பிடிச்ச மெனு தான் பேராண்டி. சிக்கன், மட்டன், நண்டு, மீனு... இப்படி எல்லாமே செஞ்சு வச்சாச்சு”

“சாப்பிடலாமா?” என்று கேட்டவன் அவளது கையை பிடித்து இழுக்க... அவளோ வர மாட்டேன் என்பதாய் அழுத்தமாய் அமர்ந்து இருக்க,கேள்வியாய் அவள்புறம் பார்வையை திருப்பினான்.

“அவ சுத்த சைவம் பேராண்டி.. அய்யர் வீட்டில் வளர்ந்த பிள்ளை”என்று சொல்ல... ஒரு நொடி தயங்கி நின்றவன் சமையல்காரரை அழைத்தான்.

 

“இவளுக்கு என்ன சமைச்சு வச்சு இருக்கீங்க?” என்று கேட்க வீட்டில் உள்ள அத்தனை பேரின் விழிகளும் அவன் மீது ஆச்சரியத்துடன் பதிந்தது.

“பாப்பா காலையில் கஞ்சி குடிப்பாங்க. மதியம் தயிர்சாதம் , மாவடு, ராத்திரிக்கு இட்லி, தோசை...”

“அம்மா என்னோட ரூம் டேபிளில் பிளட் டெஸ்ட் எடுக்கிற கிட் இருக்கும் அதை எடுத்துட்டு வாங்க” என்றவன் சமையல்காரரை அனுப்பி வைத்து விட்டு... அவள்புறம் திரும்பினான்.

யாரும் அருகில் இல்லாததை உறுதி செய்து கொண்டு மென்குரலில் பேசினான்.

“நீ எவ்வளவு வெயிட்... காத்தை தான் சாப்பிடுவ போல... மிஞ்சிப்போனா ஒரு ஐம்பது கிலோ இருப்பியா?” என்றான் மேலிருந்து கீழாக பார்த்து...

“நா.. நாற்பத்தி எட்டு”

“ரொம்ப கஷ்டம் தான்” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக.. புரியாமல் அவள் திருதிருக்க அவளை சுவாரஸ்யமாக பார்வையிட்டான் முதல்முறையாக.

“என்னோட வெயிட் நூற்று பதினைஞ்சு தெரியுமா?”

‘கொஞ்சமா தின்னாத் தானே’ மனதுக்குள் திட்டிக் கொண்டாள்.

இன்னமும் அவளுக்கு புரியவில்லை என்பது அவளது முக பாவனையிலேயே அவனுக்கு தெரிய வர தன்னை மீறி எழுந்த சிரிப்புடன் கொஞ்சம் லேசாக அவளை நெருங்கி அமர்ந்தான்.

“நான் கொஞ்சம் இறுக்கி கட்டி பிடிச்சா கூட உடைஞ்சுடுவ போல...” என்று சொல்ல அவன் சொன்ன வார்த்தைகள் அவள் காதுக்குள் நுழைந்து மூளையை சென்று சேரவே சில நொடிகள் பிடித்தது.

திக் பிரமை பிடித்தவளைப் போல அமர்ந்து இருந்தவளைப் பார்த்து அவனது சிரிப்பு இன்னமும் விரிந்தது.

அவளுக்கு பிளட் டெஸ்ட் எடுத்தவன் ஏதேதோ பேப்பரில் கிறுக்கினான்.

“சுப்பையா அண்ணா... இங்கே வாங்க...” என்று அழைக்க சமையல்காரர் வேகமாக அங்கே ஓடி வந்தார்.

“இதோ இதுல இருக்கிற சாப்பாடு ஐட்டம்ஸ் எல்லாம் சரியா இவளுக்கு கொடுக்கணும். அதுக்கு நீங்க தான் பொறுப்பு” என்று சொல்ல மகிழ்வுடன் தலையை ஆட்டினார் அவர்.

“சரிங்க தம்பி” சின்ன வயதில் இருந்தே அவனை பார்த்து இருப்பவர் ஆயிற்றே... முதலாளியின் மகன் மீது பாசம் இல்லாமல் போகுமா? அவன் வாழ்க்கையை வாழாமல் போய் விடுவானோ என்று அவனுக்காகவும், இந்த அப்பாவி பெண்ணுக்காகவும் தவித்தவர் அல்லவா?

Post a Comment

புதியது பழையவை