அத்தியாயம் 28
வீட்டிற்கு வந்ததும்
அறைக்குள் வேகமாக நுழையப் போன கண்ணனை தடுத்து நிறுத்தினான் அக்னி.
“என்ன அவசரம் கண்ணா...
கொஞ்சம் இரு உன்கிட்டே பேசணும்” என்று சொல்ல, கண்ணன் பயந்து போய் பார்வையை
சுற்றிலும் அலைய விட்டான்.
ஏற்கனவே வெளியில் உணவை
முடித்துக் கொண்டதால் அருந்ததி நேராக உறங்க சென்று இருக்க, ஹாலில் வேறு யாருமே
இல்லை.
“ப்ரோ நீங்க என்னை வச்சு
என்டர்டெயின் பண்றீங்கன்னு புரியுது. ஆனா ப்ளீஸ்! விட்டுடுங்க. நான் பாவம்”
“என்ன கண்ணா... நான்
உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசலாம்னு எவ்வளவு ஆசையா வந்தேன். நீ
என்னடானா இப்படி பேசுற” என்று கொஞ்சம் சலித்துக் கொள்ள, கண்ணன் அவனை ஆராய்ச்சியாக
பார்த்தபடி ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.
“சொல்லுங்க ப்ரோ... அப்படி என்ன
முக்கியமான விஷயம்?”
“படம் எப்படி இருந்துச்சு
கண்ணா?”
“படம் எல்லாம் நல்லா தான்
இருந்துச்சு... எனக்குத் தான் ஏன் அங்கே வந்தோம்னு தோணுச்சு.”கடுப்பாக பதில்
சொன்னான்.
“ஏன் கண்ணா?”
“ஹம்... உங்களோட வந்து
தொலைச்சேன் இல்ல... அதான். ஒரு கல்யாணம் ஆகாத கன்னிப் பையன் பக்கத்துல இருக்கானே
அப்படின்னு நினைச்சு பார்த்தீங்களா? புருசனும், பொண்டாட்டியும் அப்படியா படம்
பார்ப்பீங்க?”
“எப்படி?” இமை கொட்டினான்
அக்னி.
“ஒருத்தர் மடியில ஒருத்தர்
உட்காரல... அவ்வளவு தான். மத்தபடி யப்பா சாமி... இதுக்குத் தான் பெரியவங்க சொல்லி
இருக்காங்க. லவ்வர்ஸ் கூடவும், புதுசா கல்யாணம் முடிச்ச ஜோடி கூடவும் படம் பார்க்க
துணைக்கு போக கூடாதுன்னு... மடையன்... கேட்டேனா நானு” தன்னைத் தானே திட்டிக் கொண்ட
கண்ணனைப் பார்க்கையில் சிரிப்பு வந்தது அக்னிக்கு.
“அப்போ அது நீயில்லையா
கண்ணா?” வரவழைக்கப்பட்ட அதிர்ச்சியுடன் கேட்டான் அக்னி.
“எது?” புரியாமல் கேட்டான்
கண்ணன்.
“படம் பார்க்கும் பொழுது
பயத்தில நான் கட்டிப்பிடிச்சது!”
‘நீ எல்லாம் மனுசனே இல்லை
தெரியுமா’ என்ற பார்வை பார்த்து வைத்தான் கண்ணன்.
“உங்க பக்கத்துல சுடிதார்
போட்டுக்கிட்டு தர்பூசணி மாதிரி இருந்த அவளுக்கும் , எனக்கும் உங்களுக்கு
வித்தியாசமே தெரியலை. அப்படித்தானே?”
“இருட்டில் அடையாளம் தெரியல
கண்ணா... அடுத்த முறை கரெக்ட்டா உன்னை கட்டிப் பிடிச்சுக்கிறேன்” என்று சொல்ல அந்த
காட்சியை ஒருமுறை மனக்கண்ணில் கொண்டு வந்து பார்த்தான் கண்ணன்.
“உவ்வேக்”
“என்ன கண்ணா.. ஹோட்டலில்
சாப்பிட்டது எதுவும் சேரலையா?”
“இப்போ இந்த கருமத்தை சொல்லத்
தான் என்னை இங்கே இருக்க சொன்னீங்களா?” பல்லைக் கடித்தான் கண்ணன்.
“வேற ஒரு முக்கியமான விஷயம்
கண்ணா” என்றான் பீடிகையுடன்.
“என்ன விஷயம்?”
“கொஞ்சம் பக்கத்துல வா...
யாருக்கும் கேட்டுடக் கூடாது பாரு” என்றான் சுற்றிலும் பார்வையை செலுத்தியபடி.
“வீட்டில் எல்லாரும் தூங்கப்
போயாச்சு. நீங்க அப்படியே சொல்லுங்க” என்றான் கடுப்புடன்.
“அடுத்த வாரம் ஹனிமூன்
போகலாமா கண்ணா” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்க... தன்னுடைய காதில் சரியாகத் தான்
விழுந்ததா என்று காதில் கையை வைத்து குடைந்து கொண்டான் கண்ணன்.
“ப்ரோ... இப்போ நீங்க ஏதோ
சொன்னீங்க... என் காதுல தப்பா விழுந்துடுச்சு... மறுக்கா சொல்லுங்க”
“எல்லாம் கரெக்ட்டா தான்
விழுந்துச்சு... நீ போய் உன்னோட துணி எல்லாம் பேக் பண்ணி வை” என்று சொல்ல வேகமாக சோபாவில் இருந்து குதித்து
எழுந்தான்.
“யோவ்! ஏதோ வீட்டு
மாப்பிள்ளைனு உன் மேல இரக்கப்பட்டு சும்மா இருந்தா ரொம்ப ஓவரா தான் போற நீ.
எவ்வளவு தைரியம் இருக்கணும் உனக்கு?. இனி என்கிட்டே இப்படி பேசினா அவ்வளவு தான்
சொல்லிட்டேன்” என்று பேசிக் கொண்டே அக்னியை விட்டு பார்வையை அகற்றாமல் பின்னோக்கி அவனது
அறை நோக்கி நகர்ந்தான் கண்ணன்.
“பேசுனா என்ன டார்லிங்
செய்வ?” நின்ற இடத்தில் இருந்தே கைகளை கட்டிக் கொண்டு அவனையே பார்த்தான் அக்னி.
“உனக்கும் உன்
பொண்டாட்டிக்கும் டைவர்ஸ் வாங்கிக் கொடுத்துடுவேன்...” சட்டமாய் சொன்னவன்
அறைக்குள் நுழைந்து கதவை தாழிட முயன்றான்.
“நானும் அதை தான் சொல்றேன்.
சீக்கிரம் டைவர்ஸ் வாங்கி கொடு... நமக்கு வசதியா இருக்கும்” என்று கொஞ்சம்
சத்தமாய் சொல்லி கண்ணை சிமிட்ட...
‘ஆத்தே...’ என்று அலறியபடி
கதவில் சாய்ந்து வேகமாக தாழிட்டான்.
‘நம்ம கால் நடுங்குச்சே.. அதை
பார்த்து இருப்பாரோ... சே! சே! வாய்ப்பில்லை... நாம தான் கெத்தா பேசிட்டு வந்தோமே’
என்று தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொண்டான்.
“நாளைக்கு காலையில முதல்
வேலையா ஊருக்கு ஓடிடணும். இந்த அருந்ததிக்கு உடம்பு சரியில்லையேன்னு இங்கே
இருந்தது தப்பா போச்சு. இனியும் இங்கே இருந்தா அப்புறம் அந்த மனுசன் குண்டுகட்டா தூக்கிட்டுப்
போனாலும் போய்டுவார். யாரு எப்படிப் போனா எனக்கென்ன? எனக்கு என் கற்பு தான்
முக்கியம்” என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டவன் அடுத்த நாள் காலையில் முதல்
வேலையாக கிளம்பி தன்னுடைய ஊருக்கு போய்
விட்டான்.
அக்னி இதை எதிர்பார்த்தே
இருந்தான். எதற்கும் இருக்கட்டும் என்று தன்னுடைய ஆட்களிடம் சொல்லி, கண்ணனை பின்
தொடரவும், அவனது போன் அழைப்புகளை கண்காணிக்கவும் ஆட்களை நியமித்து இருந்தான்.
அடுத்த வாரமே வீட்டு ஆட்களை
சரிகட்டி அருந்ததியுடன் தேன்நிலவுக்கு செல்வதாக கூறிவிட்டு அவளை அழைத்துக்
(இழுத்துக்) கொண்டு ஊட்டி வந்து விட்டான். துணைக்கு நீமோவையும் அழைத்துக்
கொண்டான்.
ஹனிமூன் என்று சொல்லிக்
கொண்டாலும் அருந்ததியை உடல் அளவில் நெருங்க அவனாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஏனோ அவளும், அவனும் மட்டும் தனித்து இருக்கும் இந்த நேரத்தில் அவளின் மனதில்
தன்னால் ஏற்பட்டு இருக்கும் காயத்தைப் பற்றி கவலைப்படாமல் அவளோடு சகஜமாய் இருக்க
அவனால் முடியவில்லை.
அதே நேரம் அவளை முறைத்துக் கொண்டும்
திரியவில்லை.
அவளுடன் நட்பாக பழகினான்.
அவளது விருப்பங்களை அறிந்து கொண்டான். தன்னைப் பற்றியும் அவளிடம் சொன்னான்.
ஆனாலும் அருந்ததி அவனிடம்
அப்படி ஒன்றும் இறங்கிப் போய் பேசி விடவில்லை. அவள் மனதிலும் காயங்கள் இருக்கிறதே.
அதுவும் அவனால் உண்டானது. வலிக்க வலிக்க காயங்கள் உண்டாக்கினான். இப்பொழுது அவன்
அவளிடம் இயல்பாக பேசினால் அவள் சட்டென்று மாறி விட முடியுமா?
ஆண்கள் செய்வதெல்லாம் செய்து
விட்டு பின் வெகு விரைவில் ஒன்றுமே நடவாதது போல இயல்புக்கு வந்து விடுவார்கள்.
பெண்களுக்கு அது சற்று கடினமான காரியம். அவர்கள் நடந்து கொண்ட விதமும், தன்னை
நடத்திய விதமும் முள்ளாய் உறுத்திக் கொண்டே இருக்கும்.
ஒன்று காயத்தை
ஏற்படுத்தியவர்களே அதற்கு மருந்து அளிக்க வேண்டும் அப்படி இல்லையெனில் காலம்
கடந்து அவர்களாகவே அந்த நிகழ்ச்சியை மறந்து போனால் மட்டுமே சாத்தியம்.
இங்கேயும் அதுதான் நடந்தது.
அக்னி அவளிடம் தன்மையாக பேசினாலும் அவளால் கடந்த காலத்தில் அவன் அளித்த காயங்களை
மறந்து அவனுடன் சட்டென ஒன்ற முடியவில்லை. விலகியே இருந்தாள்.
அங்கே அவர்கள் வந்து மூன்று
நாட்கள் ஆகி இருந்தது.
அன்றைய தினம் அவளை அழைத்துக்
கொண்டு அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று இருந்தான். அங்கே இருந்த பெஞ்சில் அவன்
ஒரு மூலையில்... அவன் மற்றொரு மூலையில். நீமோ அவன் காலடியில்...
இருவருக்கும் இடையில் அமைதி
மட்டுமே. அக்னிக்கு அவளை எப்படியாவது சமாதானம் செய்து விட வேண்டும் என்ற எண்ணம்
வலுத்துக் கொண்டே இருந்தது. தனக்காய் அன்று அவள் மருத்துவமனையில் பேசியது அவனை
வெகுவாய் பாதித்து இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
அதுநாள் வரையில் அந்த சூழலில்
மூச்சு முட்டிப் போய் இருந்தவனுக்கு அவன் சார்பாக பேசிய அவளிடம் மனது தவ்விப் போய்
ஒட்டிக் கொண்டது.
பிடிக்காத திருமணம் என்று
தெரிந்தே எல்லாரும் அமைதியாக இருந்து அவனை பாழுங்கிணற்றில் தள்ளி விட்டதைப் போலத்
தான் அவனுக்கு அதுநாள் வரையும் இருந்தது. ஆனால் அவள் பேசப்பேச அவனுக்குமே அவன்
பக்க தவறும் புரிந்தது.
ஆண் மகன் அவன் அல்லவா மறுத்து
பேசி இருக்க வேண்டும். அதை விடுத்து அவளிடம் கோபம் கொண்டு அவளை வாட்டியதை எண்ணி
இப்பொழுது அவன் மனம் வேதனை அடைகிறது.
“கிளம்பலாமா? போர் அடிக்குது”
அவள் குரலில் சுயம் தெளிந்தான்.
“கொஞ்ச நேரம் இருந்துட்டு
போகலாமே...”
“அடிக்குற குளிருக்கு இங்கே
இப்படி உட்கார்ந்து வானத்தை பார்த்து நேரத்தை ஓட்டுறதுக்கு பதிலா கிளம்பி ரூமுக்கு
போனா சூடா ஏதாவது சாப்பிட்டு அங்கேயே தூங்கலாம். இன்னும் நல்லா இருக்கும்” என்று
அவள் சலிப்பும், ஆவலும் சரிபாதியாய் கலந்த
குரலில் சொல்ல அவனுக்கு சிரிப்பு வந்தது.
“உனக்கு பசி வந்துடுச்சுன்னு
சொல்லு” என்றவன் கையோடு எடுத்து வந்திருந்த ஜூஸ் பாட்டிலில் ஒன்றை எடுத்து அவளிடம்
நீட்டினான். அவளுக்காக பார்த்து பார்த்து ஏதேனும் சத்தான உணவுகளை கையோடு கொண்டு
வந்து விடுவான்.
“என்னவோ... வாங்க போகலாம்”
“சாரி அருந்ததி...” என்று
மென்குரலில் அவன் சொல்ல, அப்பொழுது தான் எழுந்தவள் காதில் விழுந்ததை நம்ப முடியாது அப்படியே சரிந்து மீண்டும் அமர்ந்து விட்டாள் தொப்பென...
“எ... எதுக்கு?”
“எல்லாத்துக்கும்... என்னோட
கோபம் முழுக்க என்னோட குடும்பத்து மேல தான். அதை நான் உன்கிட்டயோ, உங்க வீட்டு
ஆட்கள் கிட்டயோ காட்டி இருக்க கூடாது. முக்கியமா நம்ம கல்யாண விஷயம்.. என்னால அதை
ஏத்துக்கவே முடியல. அந்த கோபம். அதெல்லாம் யார் கிட்டே காட்டுறதுன்னு தெரியாம
உன்கிட்டே கொஞ்சம் ஹார்ஷா நடந்துகிட்டேன். அதுக்குத்தான்”
“உங்களோட ஒரு சாரி
எல்லாத்தையும் சரி செஞ்சுடும்னு நினைக்கறீங்களா?” அவள் பார்வை எங்கோ வெறித்துக்
கொண்டிருந்தது.
“கண்டிப்பா இல்லை.. இது ஜஸ்ட்
என்னோட குற்ற உணர்ச்சியை குறைக்கும். என்னால உனக்கு ஏற்பட்ட வலியை எப்படி
குறைக்கிறதுன்னு எனக்குத் தெரியலை. முடிஞ்ச அளவு இனி அது மாதிரி நடக்காம இருக்க
முயற்சி செய்றேன்”
“இப்போ நீங்க கொஞ்சம் இறங்கி
வந்து பேசினதும் நான் இதுநாள் வரை நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு உங்க கிட்டே
ஈஈஈன்னு சிரிச்சு பேசணுமா?” அவள் நான் இறங்கி
வர மாட்டேன் என்பதை அறிவித்தாள்.
“என்ன செய்யணும்னு சொல்லு...
செஞ்சிடறேன்” இலகுவாய் அவன் வழி சொன்னான்.
“ஆரம்பத்துல என்னை எவ்வளவு
கொடுமை செஞ்சீங்க? போலீஸ் ஆக ட்ரைனிங் கொடுக்கிறேன்னு சொல்லி..” கோபத்தில் மூச்சு
வாங்கியது அவளுக்கு.
“வேணும்னா இப்போ இந்த
பார்க்கை சுத்தி பத்து ரவுண்ட் நான் ஓடி வரட்டுமா?” உடனே செய்யத் தயார் என்ற
பாவனையில் அவன்.
“ஹை ... ஹை... இது நல்ல கதையா
இருக்கே... நீங்க ஆர்மி மேன்... உங்களுக்கு பத்து ரவுண்ட் ஓடுறது எல்லாம் ஜூஜூபி”
“சரி என்ன செய்யட்டும்? நீயே
சொல்லு” அவளிடமே தீர்ப்பு கூறும் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டு நல்ல பிள்ளையாய்
ஒதுங்கிக் கொண்டான்.
“இங்கே இன்னும் எத்தனை நாள்
இருக்கப் போறோம்.?”
“நீ எவ்வளவு நாள் இருக்க
ஆசைப்படுறியோ... அத்தனை நாள்” இனி எல்லாமே உன் விருப்பம் போலத் தான். லேசாய் கோடு
காட்டி பேசினான் அக்னி.
“இன்னும் பதினைஞ்சு நாள்
இங்கே இருக்கலாம்”
“ஓகே...”
“இங்கே இருக்கிற வரை நான்
சொல்றதை மட்டும் தான் நீங்க கேட்கணும். சம்மதமா?” என்று கேட்க யோசிக்காமல் பதில்
அளித்தான்.
“சம்மதம்...” நீமோ அவனைத்
திரும்பி பாவமாய் ஒரு பார்வை பார்த்து வைத்தது.
‘வாயை கொடுத்து மாட்டிக்கிட்டியே
வாத்தியாரே’
“மாட்டினது யாருன்னு அப்புறம்
தெரியும் நீமோ’ கண்களால் தைரியம் சொன்னான் அக்னி.
“சரி இப்போ இந்த க்ரௌண்டை
சுத்தி பத்து ரவுண்ட் வாங்க” என்று சொல்ல, முகத்தில் இருந்த புன்னகை மாறாமல்
எழுந்தவன் ஷூ லேசை சரி செய்து கொண்டு ஓடத் தயாராக , அவனை தடுத்து நிறுத்தினாள்.
“ஹலோ... என்னை கையில்
தூக்கிட்டு ஓடணும்...”
‘இன்டரஸ்டிங்’
“என்னது ... உன்னையும்
தூக்கிட்டு ஓடணுமா? நோ சான்ஸ்... என்னாலே முடியவே முடியாது” போலியாய் மறுத்தான்.
உள்ளுக்குள் ஏகப்பட்ட குஷி சாருக்கு.
அவன் பயந்து பின் வாங்குவதைப்
போல பேச அவளுக்கோ அது தான் அவனுக்கு சரியான தண்டனை என்று அழுத்தமாக தோன்றி விட அதை
செய்தே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள் அருந்ததி.
அவனுக்கு வேண்டியதும் அது
தானே.
முகத்தை சோகமாய் வைத்துக்
கொண்டே அவளை தூக்கியவன் முதல் சில அடிகளை வெகுவாக கஷ்டப்பட்டு நடப்பவன் போல
தடுமாறி நடந்தான்.
“ஹலோ... சும்மா நடந்தா
எப்படி?”
“ஏய்! உன்னை தூக்கிட்டு
நடக்கிறதே பெருசு...”
“எனக்கு போர் அடிக்குது...”
“அதுக்கு?”
“பாட்டு பாடிட்டே நடங்க”
“கொஞ்சம் ஓவரா தான் போற”
“ஏன் பாட மாட்டீங்களா?”
“என் கிரகம்.. பாடித்
தொலைக்கிறேன்” என்று வெளியில் சலித்துக் கொண்டவன் குறும்புடன் பாடத் தொடங்கினான்.
“குண்டு
குண்டு
குண்டு
பெண்ணே
கூப்பிடுது
ரெண்டு கண்ணே”
“என்ன கலாய்க்க ட்ரை
பண்றீங்களா?” கோபத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்க்க... இருவர் முகமும் அருகருகே.
அருந்ததி அதை உணரவில்லை.
“சே! சே!”
“ஒழுங்கா கையில் மிதக்கும்
கனவா நீ பாட்டு பாடுங்க”
“கையில் மிதக்கும்
காண்டாமிருகம் நீன்னு வேணும்னா பாடுறேன். எனக்கெல்லாம் சுட்டு போட்டாலும் பொய்
சொல்ல வராதுப்பா” என்று சொல்ல அவன் தலை முடியை கையில் பிடித்து ஆட்டத்
தொடங்கினாள்.
“உனக்கு ரொம்ப கொழுப்புடா...
பொண்டாட்டியை கொஞ்சம் அழகா இருக்கனு சொன்னா குறைஞ்சு போயிடுவியா நீ?”
“இருந்தா சொல்ல மாட்டேனா?”
அவன் விடுவதாக இல்லை
“உன் மூஞ்சிக்கு நானே
அதிகம்...நீ என்னை சொல்றியா” அவன் அவளை சீண்ட சீண்ட அவளுக்கு கண் மண் தெரியாமல்
கோபம் வரத் தொடங்கியது. கோபத்தில் செல்லும் பாதையை கவனிக்கத் தவறினாள்.
நீமோ சத்தமின்றி அவர்களை
பின்தொடர, பார்க்கில் இருந்து அவளை தூக்கியபடியே
வெளியே வந்தவன் அவளை சீண்டிக் கொண்டே தாங்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு
அழைத்து வந்து விட்டான். ஹோட்டலில் தங்கி இருந்த மற்றவர்கள் அவர்கள் இருவரையும்
பார்த்து தங்களுக்குள் புன்னகைத்து கொண்டார்கள். அருந்ததி அவனிடம் சண்டை போடும்
மும்மரத்தில் இருந்தாள். சுற்றுபுறத்தில் எதையும் அவள் கவனிக்கவில்லை.. ம்ஹ்ம்..
அவன் கவனிக்க விடவில்லை.
அறைக்குள் வந்து ஒற்றைக்
கையால் கதவை தாழிட்டவன், அவளை கைகளில் ஏந்தியபடியே படுக்கையில் அமர்ந்து விட்டான்.
திரும்பி லேசாய் ஒரு பார்வை...
நீமோவுக்கு என்ன புரிந்ததோ
அடுத்த அறைக்குள் புகுந்து கொண்டது.
“நான் பேசிட்டு இருக்கேன்.
எனக்கு பதில் சொல்லாம அங்கே என்ன பார்வை?” அவனது கன்னத்தைப் பிடித்து இழுத்து
தன்புறம் பார்வையை திருப்பினாள்.
“நீ அழகா இல்லைன்னு நான்
எப்போ சொன்னேன் அதி” ஆழ்ந்த குரலில் அவள் கண்களில் இருந்து பார்வையை அகற்றாமல்
அவன் பேச, அவளுக்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது.
முயன்று சமாளித்து தன்னை
மீட்டுக் கொண்டாள்.
“பொய்! நான் குண்டா
இருக்கிறதால தான் உங்களுக்கு என்னைப் பிடிக்கல...”அவள் பார்வை தரையில் இருந்தது.
“எனக்கு கல்யாணத்தைத் தான்
பிடிக்கலை அதிமா... இந்த கொழு கொழு அமுல் பேபியை எப்பவும் பிடிக்கும் எனக்கு.
அதுவும் இப்போ கொஞ்ச நாளா ரொம்ப பிடிக்குது.” என்று பேசியபடியே அவள் கன்னத்தில்
கரங்களை பதித்தவன் தன்னுடைய முகத்துக்கு
வெகு அருகில் அவளை இழுத்துக் கொண்டான்.

கருத்துரையிடுக