சதிராடும் திமிரே 27

 




அத்தியாயம் 27

சஹானா அருகில் இருந்த தூணில் முட்டிக் கொள்ளும் வேளையில் பாய்ந்து சென்று அவளை காப்பாற்றி இருந்தனர் அவளது அன்பு அண்ணனும், காதல் கணவனும்.

இருவரும் ஆளுக்கு ஒருபுறமாக அவளைத் தாங்கிப் பிடித்து விட்டதால் எந்தவித சேதாரமும் இல்லாமல் சஹானா பாதுகாப்பாக இருந்தாலும் ஓட்டு மொத்த குடும்பமும் ஒரு நொடி வெலவெலத்துப் போனது மட்டும் நிஜம். சஹானாவை விட அபிமன்யு தான் அதிகம் பயந்து இருந்தான்.

எல்லோரும் இயல்பு நிலைக்கு திரும்பவே சில கணங்கள் பிடித்தது.

அபிமன்யு அங்கே உட்காரக் கூட விரும்பவில்லை. மனைவியை கையில் ஏந்திக் கொண்டு வீட்டில் இருந்த அத்தனை பேரும் கெஞ்சியதை கொஞ்சமும் காதில் வாங்காமல் விறுவிறுவென்று நடந்து காரில் ஏறி புறப்பட்டு இருந்தான்.

சஹானாவை கண்ணுக்குள் வைத்து காதல் செய்பவனாயிற்றே அவன். அவனுக்கு வந்த ஆத்திரத்திற்கு அங்கேயே துரைசாமியை கை நீட்டி அடித்து இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அத்தனை ஆத்திரம் அவனுக்கு.

என்ன தான் காதல் திருமணம் செய்து கொண்டாள் என்று மகள் மீது கோபம் இருக்கட்டுமே. அதற்காக கர்ப்பிணி பெண்ணை இப்படியா தள்ளி விட்டு போவது? எங்களுக்கு குழந்தை என்றால் அவருக்கு பேரக் குழந்தை இல்லையா? மனித ஜென்மம் தானா அவர்!

சஹானாவின் காதுகளில் விழுந்து விடாத வண்ணம் மானாவாரியாக திட்டினான்.

இன்னமும் அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்து இருந்த சஹானாவை கண்டவன் ஒரு பெருமூச்சுடன் பேசத் தொடங்கினான்.

சனா

“...”

சனாஆஆகொஞ்சம் அழுத்தமாக கூப்பிட்ட பிறகே தன்னிலை உணர்ந்து அவனை பாவமாக பார்த்தாள்.

.. அப்பா வேணும்னு என்னை தள்ளி விடலை தானேங்க?” கண்களில் கண்ணீர் வெளிவரத் துடித்தபடி கேள்வி கேட்ட மனைவியை பார்த்ததும் பதறினான் அபிமன்யு.

காரை ஓரமாக நிறுத்தி விட்டு அப்படியே அவளை இழுத்து தோளில் சாய்த்துக் கொண்டான்.

ஒண்ணுமில்ல சனா... என்னைப் பாரு... நான் இருக்கேன்ல உன் கூடவே... உனக்கும் , நம்ம குழந்தைக்கும் ஏதாவது ஆக விட்டுடுவேனா?”

ஆனா.. அப்பா...”

அந்தாளைப் பத்தி பேசாதே ... சாரி சனா நானும் உங்கப்பாவை மரியாதையா நடத்தணும்னு தான் நினைக்கிறேன். ஆனா அவர் அப்படி நடந்துக்கவே மாட்டேங்கிறார்பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு பேசிய விதத்திலேயே அவனது கோபத்தின் அளவு புரிந்து விட்டது அவளுக்கு.

 சனா

ம்ம்ம்

என்னடா அமைதியா இருக்க... இன்னும் பயம் தெளியலையா?”

நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?”

உங்க அப்பாவுக்கு சப்போர்ட் பண்ணி மட்டும் பேசாதே

இங்கே நடந்த எதையும் அங்கே நம்ம வீட்டில் யாருக்கும் சொல்ல வேண்டாம். தெரிஞ்சா அவங்க வருத்தப்படுறது மட்டும் இல்லை. அத்தையைப் பத்தி உங்களுக்கே தெரியும். நம்ம மேல இருக்கிற அக்கறையில நம்மளையும் இனி அங்கே அனுப்ப மாட்டாங்க. அவங்களையும் ஏதாவது பேசினாலும் பேசிடுவாங்க. இரண்டு வீட்டுக்கும் நடுவில அது தேவை இல்லாத மனக்கசப்பை உண்டாக்கிடும். அப்பா மட்டும் தான் இந்த மாதிரி... அதுக்காக மத்தவங்கள கஷ்டப்படுத்த வேணாமே

உனக்காக நான் என்ன வேணா செய்வேன்ங்கிறத அட்வாண்டேஜா எடுத்துக்காத சனாகுரலை உயர்த்தாமல் பேசினாலும் அதில் இருந்த கோபத்தை புரிந்து கொண்டாள் சஹானா.

ப்ளீஸ்!” கண்களை சுருக்கி கெஞ்சியவளை மறுக்கத் தோன்றவில்லை அவனுக்கு.

உனக்காக... நல்லா கேட்டுக்கோ உனக்காக மட்டும் தான் இதுக்கு ஒத்துக்கிறேன்... இன்னொரு முறை உங்க அப்பா ஏதாவது ஏடாகூடம் செஞ்சா அப்போ நான் அமைதியா இருக்க மாட்டேன்

ஆயிரம் தான் இருந்தாலும் அவர் என்னைப் பெத்தவர்ங்க

அதனால தான் அவர் என்னை எந்த அளவுக்கு தரம் தாழ்த்தி பேசினாலும் நான் அமைதியா போறேன். ஆனா உனக்கு ஒன்னுன்னா?” என்று ஆத்திரத்துடன் பேசியவனைக் கண்டு அவள் கண்கள் ஒளிர்ந்தது.

என்னடி பார்வை வேண்டி கிடக்கு... நானே கடுப்பில இருக்கேன்என்று அவன் கடுகாய் பொறிய... அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் சஹானா.

இப்படி செஞ்சா ஒண்ணும் நான் சமாதானம் ஆகிட மாட்டேன்முறுக்கிக் கொண்டான்.    கோபமாய் இருக்கிறானாம்

உங்க கோபத்தை எப்படி சரி செய்றதுனு எனக்குத் தெரியுமேஅவனை இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டாள்.

இருவருக்குமே ஒருவருக்காக மற்றொருவர் பேச்சை மாற்றுகிறார் என்பது புரியாமல் இல்லை.

அதே நேரம் துரைசாமி போனில் கண்டபடி அவனைக் கத்தித் தீர்த்தார்.

ஏன்டா உனக்கு அறிவு இருக்கா இல்லையா? படிச்சு படிச்சு சொன்னேனே? வெளியே போகாதனு... அவ்வளவு தூரம் சொல்லியும் போலீஸ் கண்ணுல மாட்டி இருக்கே..”

யோவ்! பெருசு ஏன் கத்துற? அதான் போலீஸ் கிட்டே மாட்டிக்காம தப்பிச்சு ஓடி வந்துட்டேன்ல..”

நாசமா போறவனே... போலீஸ் உன்னை துரத்திட்டு இருக்காங்கனு நீ சொன்னதும் என் உசுரே போயிடுச்சுடா

.. என்னமோ என் மேல இருக்கிற பாசத்துல டென்ஷன் ஆனா மாதிரி சொல்லுற... நான் மாட்டினா உன்னோட ஜோலி முடிஞ்சது அதுக்காகத் தானே

டேய்! எனக்கு வர்ற கோவத்துக்கு...”

என்ன? என்னையும் ஆள் வச்சு கொல்லலாம் போல தோணுதா?” அவர் மனதில் சில நாட்களாக தோன்றிக் கொண்டே இருக்கும் ஒரு விஷயத்தை அவன் எளிதாக போட்டு உடைத்து விட.. ஒரு நொடி அமைதியானார் துரைசாமி.

ஹா ஹா... என்னய்யா? என்னைப் பார்த்தா கேனையன் மாதிரியா இருக்கு? நான் செத்தா அதுக்கு அப்புறம் ஆதாரம் எல்லாம் எங்கே போய் சேரணுமோ? அங்கே போய்டும். நானும் எத்தனையோ பேரை பார்த்து இருக்கேன்.

காதல் கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு வேற ஜாதி பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டானு எத்தனையோ பேர் சொல்லி நான் போட்டுத் தள்ளி இருக்கேன். ஆனா உன்னை மாதிரி மோசமான ஒருத்தனை நான் பார்த்ததே இல்லை

“...”

அவனவன் பணத்துக்காக செய்வாங்க... இல்லேன்னா ஜாதிக்காக  செய்வாங்க.. அட அதுவும் இல்லைனா பகைக்காக செய்வாங்க... ஆனா நான் பார்த்ததுலயே உன்னோட திமிருக்காக கொல்ல சொன்ன ஒரே ஆள் நீ தான்

என்னடா இப்போ எல்லாம் ரொம்ப பேசுற?

என்ன செய்ய? வெளியே யார்கிட்டேயும் தான் பேச முடியாம செஞ்சுட்டியே? என்னிக்கு உன்னோட வேலையை ஒத்துக்கிட்டேனோ அன்னியில் இருந்து எனக்கு ஏழரை பிடிச்சு ஆட்டுது

 எல்லாம் என் நேரம்... ஏர் ஓட்டுறவன் இளிச்சவாயனா இருந்தா மாடு மச்சான்னு கூப்பிடுமாம்.”

இந்த ஜோக்குக்கு அப்புறமா சிரிக்கிறேன்... முதல்ல எனக்கு பணத்தைக் கொடு”

“ஏற்பாடு செய்றேன்னு தான் சொன்னேனே... கொஞ்சம் பொறுத்துத் தொலை”

“இந்தா பாருய்யா... நான் இப்போ வேற ஹோட்டலுக்கு வந்துட்டேன். இந்த இடமும் எனக்கு பாதுகாப்பா தோணலை. அதனால சீக்கிரமா பணத்தை ஏற்பாடு செஞ்சு கொடு”

“ஆஆஆஆ... பணம் பணம்னு ஏன்டா என் உயிரை எடுக்கிற... இதுவரைக்கும் எழுபது லட்சம் கிட்டே கொடுத்து இருக்கேன்...”

“யோவ்! பெருசு உன்னைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டேன்... ஊருக்குள்ளே முக்கால்வாசி இடம் உன்னோடது தானாம். எப்படிப் பார்த்தாலும் இன்னும் பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு சேர்த்து வச்சு இருக்க.. அதுல கொஞ்சம்  எனக்குக் கொடுத்தா குறைஞ்சா போய்டுவ”

“வேலையே செய்யாத உனக்கு எதுக்குடா நான் பணம் கொடுக்கணும்?

“ஏதோ ஒருமுறை சொதப்பிடுச்சு... அதனால என்ன? நான் மட்டும் இங்கே இருந்து தப்பிச்சு வெளி மாநிலத்துக்கு போயிட்டேன்னு வச்சுக்கோ... அப்புறம் என்னோட தோஸ்துங்க கிட்டே சொல்லி உன் பொண்ணையும், மாப்பிள்ளையையும் ஈசியா போட்டுத் தள்ளிடுவேன்”

“அப்படியா சொல்ற?.. உன்னால முடியுமா?” இன்னமும் அந்த எண்ணத்தை அவர் மாற்றிக் கொள்ளவில்லை என்பது அவர் பேச்சிலேயே தெரிந்து போனது.

“கண்டிப்பா செஞ்சு முடிச்சுடுவேன்.”

“அப்போ கூடவே சேர்த்து என்னோட வீட்டுக்கு புதுசா ஒரு தரித்திர்யம் பிடிச்சவ வந்து இருக்கா... அவளையும் கொன்னுடு... ஆனா அவளோட அண்ணன் செத்ததைப் பார்த்து அவ துடிச்சு கதறி அழணும். அதுக்கு அப்புறம் தான் அவளை கொல்லனும்”

“செஞ்சிடலாம்... ஆனா அதுக்கு தனியா கூலி கொடுக்கணுமே...”

“முதல்ல நீ வாங்கின கூலிக்கு ஒழுங்கா வேலையைப் பார்... அப்புறம் இதுக்கு தனியா காசு தர்றேன்”

“விவரம் தான்”

“என்னை யாராலையும் ஏமாத்த முடியாது” என்று தற்பெருமை பேசிக் கொண்டிருந்தார் துரைசாமி.

அங்கே அவரின் வீடே கலவர பூமியாக காட்சி அளித்துக் கொண்டிருந்தது.

“அம்மா, அஞ்சலி உங்க இரண்டு பேர் கிட்டயும் தான் பேசிட்டு இருக்கேன். ஒன்னு என்னை அப்பா கிட்டே பேச விடுங்க... இல்லன்னா இந்த வீட்டை விட்டு இப்பவே கிளம்பலாம் வாங்க”

“அதெல்லாம் தப்புங்க...”முந்திக் கொண்டு பேசினாள் அஞ்சலி.

“டேய் சத்யா அப்பா நல்லவர்டா”

“அம்மா ப்ளீஸ்! ஊர்க்காரங்க எல்லாரும் சொல்றதைக் கேட்டு அப்பா மேல சந்தேகப்பட்டு நான் இப்படி பேசல... நான் பிறந்ததுல இருந்து அவரை பார்த்துட்டு இருக்கேன். நான் பார்த்து வளர்ந்த அப்பா இவரில்லை. கண்டிப்பா அவருக்கு ஏதோ பிரச்சினை இருக்கு... அவர் கிட்டே பேசினா தான் அது என்னனு தெரிஞ்சு அதை சரி பண்ண முடியும். ஆனா நீங்க இரண்டு பேரும் எப்போப் பாரு குறுக்கே வந்து தடுத்துட்டே இருக்கீங்க? இன்னிக்கு என்ன நடந்துச்சுன்னு பார்த்தீங்க தானே? இதுக்கு அப்புறமும் பொறுமையா இருக்க சொன்னா எப்படி?

அவனது கேள்விகளுக்கு இருவருமே எந்த பதிலும் சொல்லவில்லை.

“அஞ்சலி உனக்கு எதுவுமே தப்பா தோணலையா? நம்ம கல்யாணம் ஆனதுல இருந்து நீயும் மாறிட்ட... நான் என்னவோ உன்னால தான் இந்த வீட்டுல சண்டை வரும்னு நினைச்சேன். ஆனா நீ அப்பா என்ன செஞ்சாலும் அமைதியா இருக்க... சை! வீடா இது மனுசனுக்கு நிம்மதியே இல்லை” என்று கத்தியவன் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியேறி விட மேகலாவும், அஞ்சலியும் ஒருவரை ஒருவர் சோகமாக பார்த்துக் கொண்டார்கள்.

“அஞ்சலி அவன் வந்ததும் நீ அவன் கிட்டே கொஞ்சம் பொறுமையா எடுத்து சொல்லும்மா...”

“சரிங்க அத்தை... நான் பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க”

சத்யன் வெகுநேரம் கழித்து திரும்பியவன் உணவு கூட உண்ணாமல் அறையில் படுத்து விட... அஞ்சலி அவன் பின்னாலேயே அறைக்குள் நுழைந்தாள்.

“சாப்பிடலையா?

“ம்ச்” ஒன்றும் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு படுத்து விட்டான்.

அவனுக்கு அருகில் அமர்ந்தவள் மெல்ல அவனது தலையை எடுத்து தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டாள். சத்யன் ஒன்றுமே பேசவில்லை. தலையை கோதி விட அவள் முனைய... வேகமாக அவள் கைகளை தட்டி விட்டான் சத்யன்.

“என் மேல என்ன கோபம்?” குரலை குறைத்து பேசினாள்.

“...”

“சொன்னாத் தானே தெரியும்?

“நம்ம இரண்டு பேரும் உண்மையான கணவன் மனைவி தானா அஞ்சலி?” அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து அவன் கேட்க... அவள் உடலில் ஒரு அதிர்வு வந்து போனது.

“என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படி எல்லாம் கேட்கறீங்க?

“கணவன் மனைவின்னா எப்படி இருக்கணும்னு எனக்குள்ளே சில ஆசைகள் உண்டு அஞ்சலி... அதுல ஒன்னு நிச்சயமா என்னோட அப்பா மாதிரி நான் இருக்கவே கூடாதுங்கிறது... கிருஷ்ணனோட கண்ணைப் பார்த்தே மனசை தெரிஞ்சுகிட்ட ராதை மாதிரி ஒரு வாழ்க்கை வாழணும்னு நினைச்சேன்...

நீ என்னை நல்லா பார்த்துக்கிற... அம்மா கிட்டே அன்பா இருக்கே... அப்பா உன்னைத் திட்டித் தீர்த்தாலும் அவரை எதிர்த்து பேசாம அமைதியா இருக்கே... இது எல்லாமே எதுக்காக? வீட்டோட அமைதிக்காகத் தானே? ஆனாலும் இந்த வீட்டில் அமைதி இல்லை...

“...”

“நீ நல்ல மருமக அஞ்சலி... நல்ல மனைவி... ஆனா நான் நல்ல மகனா மட்டும் தான் இருக்கேன்... உனக்கு ஒரு நல்ல கணவனா நடந்துக்கிறதே இல்லை”

“அப்படின்னு யார் சொன்னது?” அவள் கரங்கள் நிற்காமல் அவனது தலையை கோதிக் கொண்டே இருந்தது.

“எனக்கே மனசாட்சி உறுத்துது அஞ்சலி... புதுசா கல்யாணம் ஆன பொண்ணுக்கு எவ்வளவோ ஆசைகள் இருக்கும். அது எதையும் என்னால உனக்கு செய்ய முடியலை. அப்போ நான் நல்ல கணவன் இல்லை தானே”

“எழுந்திரிங்க...”என்றவள் அவன் கேள்வியாக அவளை பார்த்தாலும் மறுக்காமல் அவள் சொன்னதை செய்தான்.

அவனை அழுத்தமாய் அணைத்து அவனது நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டாள்.

“நீங்க எப்பவும் எனக்குத் துணையா என் கூட இருந்தா போதும். உங்க அப்பா என்ன அவரை மாதிரி ஆயிரம் பேரை நான் சமாளிப்பேன். ஆனா நீங்க எப்பவும் என் பக்கம் இருக்கணும்”

“நீ இப்படி எல்லாம் பேசினா நான் பெண்டாட்டி தாசனா மாறிடுவேன் போலவே”லேசான சிரிப்பு அவன் குரலில்.

“மாறினா என்னவாம்?

“அப்படி மாறினா உனக்குத் தான் கஷ்டம்” என்றவன் அவளுள் மூழ்கிப் போனான். ஏனோ அவனுக்கு மனம் சஞ்சலம் ஏற்படும் பொழுதெல்லாம் அவளிடம் வந்தால் மட்டும் தான் நிம்மதி கிடைப்பது போலொரு எண்ணம் அவனுக்கு.

புதிதாக திருமணம் முடித்த பொழுதுகளில் அறையை விட்டு வெளியே செல்லாமல் அவளுடனே பொழுதுகளை கழிக்க விரும்பினான் சத்யன். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை அதற்கு அடுத்து வந்த நாட்களிலேயே துரைசாமி அவனை உணர வைத்து விட்டார்.

இரவுகளில் வீடே தங்காத அவர்... பெரும்பாலும் சத்யனை தன்னுடைய அருகிலேயே இருத்திக் கொண்டார். அதையும் தாண்டி சில நேரங்களில் பகலில் சத்யனும், அஞ்சலியும் அறைக்குள் சென்று விட்டால்... முதலில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்கும். அடுத்து மேகலாவுடன் சண்டை போடுவார். அப்பொழுதும் வெளியே வராவிட்டால் அடுத்து மேகலாவின் மீது கையை நீட்டி விடுவார்.

பெற்ற மகன்... மருமகள் கூட வாழப் பொறுக்காத உயரிய குணம் துரைசாமிக்கு.

அவருக்கு மகன் வாழ வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் உண்டு தான். ஆனால் அது அவர் பார்த்த பெண்ணாக இருக்க வேண்டும். அவனின் மனைவி அஞ்சலியாய் இருப்பது தான் அவருக்கு பிடித்தமில்லாமல் போனது.

ஒருவேளை அஞ்சலி கெஞ்சிக் கூத்தாடி... அவரின் காலில் விழுந்து கதறி மேகலாவைப் போல இன்னுமொரு அடிமையாய் அந்த வீட்டிற்குள் வந்து இருந்தால் கொஞ்சமேனும் மகிழ்ந்து இருப்பார். ஆனால் இங்கே தான் அப்படி நடக்கவில்லையே. அதே நேரம் தன்னுடைய ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அஞ்சலியை வசை பாட மறப்பதில்லை அவர்.

நடப்பது எல்லாமே அவர் திட்டமிட்டபடி தான் நடந்து கொண்டு இருப்பதாக அவருக்கு ஒரு எண்ணம். ஆனால் உண்மை அதுவல்ல என்பதை அவர் சீக்கிரமே தெரிந்து கொள்ள வேண்டிய நாளும் வந்தது.





Post a Comment

புதியது பழையவை