அத்தியாயம் 9
“உனக்கு என்ன பைத்தியமா? நான் தான் எனக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகப் போகுதுன்னு சொன்னேன்ல.அப்புறமும் ஏன் இப்படி என்னை தொந்தரவு செய்ற?” மித்ராவின் பொறுமை எல்லையை கடந்து விட்டு இருந்தது.
“ஏன் இவ்வளவு கோபம் பேபி?எனக்கு உன்னை பார்க்கணும் போல இருந்தது.நீ பஸ் ஸ்டாண்ட் வருவன்னு எதிர்பார்த்தேன்.நீ தான் வராம இருந்துட்ட.அது தான் போன் பண்ணி வர சொன்னேன்”கூலாக பேசினான் பிரபஞ்சன்.
“எனக்கு உன்னை பிடிக்காத பட்சத்தில் நீ செய்து வரும் காரியங்கள் எனக்கு உன் மேல் எவ்வளவு வெறுப்பை ஏற்படுத்துகிறது தெரியுமா?”
பிரபஞ்சன் ஒரு நிமிடம் நிதானித்தான்.அவன் கண்கள் யோசனையை தத்தெடுத்தது.சட்டென கண்கள் பளிச்சிட நிமிர்ந்தவன் அவளிடம் பேசினான்.
“உனக்கு என்னை பிடிக்காதது தானே பிரசின்னை பேபி...நீயும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி என்னை காதலித்து விடேன்” என்றான் கண்களில் கள்ளச் சிரிப்புடன்.
“யோவ் உனக்கு கொஞ்சம் கூட சீரியசா பேச தெரியாதா?எப்ப பாரு என்ன விளையாட்டு?” கோபத்தில் பொரிந்து தள்ளினாள் மித்ரா.
“நான் விளையாடலை பேபி.நிஜமா தான் சொல்றேன்”அவன் வார்த்தையில் தெளிவும் தீர்க்கமும் இருந்தது.
“எனக்கு உன் மேல் எப்படி காதல் வரும்...என் வீட்டில் எனக்கு திருமணம் முடிவு பண்ணி இருக்காங்க?”
“அவங்க தானே முடிவு செய்து இருக்காங்க! நீ இல்லையே?”
அவனது இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று நிஜமாகவே சங்கமித்ராவுக்கு தெரியவில்லை.அவன் சொல்வது நிஜம் தானே!இதை எப்படி மறுப்பது என்று அவள் மௌனமாக இருக்க பிரபஞ்சன் மீண்டும் தொடர்ந்தான்.
“சரி பேபி.நான் சொல்வதை கொஞ்சம் கவனித்து எனக்கு பதில் சொல்லு.கல்யாணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நடப்பது இல்லையா?அதை உன் மனசுக்கு பிடிச்சவன் கூட நடந்தா தானே உன் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்.சும்மா மத்தவங்க சொல்றாங்கன்னு நீ கல்யாணம் பண்ணிகிட்டா உன் வாழ்க்கை எப்படி சந்தோசமா இருக்கும்.”
பிரபஞ்சன் கூறுவது சரி என்று பட்டாலும் அதை அப்படியே ஒத்துக் கொள்ள மனம் வரவில்லை சங்கமித்ராவுக்கு.ஏனெனில் தான் அமைதியாக இருந்தால் அது அவனுக்கு சாதகமாக முடியும் என்பதை உணர்ந்தவள் வேண்டுமென்றே மறுத்து பேசலானாள்.
“நல்லா பேசி பழகி அப்புறம் கல்யாணம் செய்யுறது எல்லாம் இப்போ தானே?நம்ம அம்மா,அப்பா எல்லாம் இப்படியா கல்யாணம் பண்ணிகிட்டாங்க.இன்னும் சொல்லப் போனால் என்னோட பாட்டியை கல்யாணம் மேடையில் தான் என்னுடைய தாத்தா பார்த்தாராம்.பாட்டி கல்யாணம் ஆகி எட்டு குழந்தை பிறந்த பிறகு தான் தாத்தா முகத்தை நிமிர்ந்து பார்த்தே பேசுவாங்களாம்.அவங்க எல்லாம் சந்தோசமா குடும்பம் நடத்தலையா?”எதிர்வாதம் செய்தாள் சங்கமித்ரா.
“நீ சொல்வது எல்லாம் சரி தான் பேபி.அது எல்லாம் நமக்கு முந்தைய தலைமுறையில்.இப்போ யார் அப்படி நடக்கிறாங்க?”
“இப்போ அதுக்கு என்ன செய்யலாம்னு சொல்றீங்க?”
“உனக்கு என்னை பிடிச்சு இருக்கு.நீ அதை ஒத்துக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிற பேபி”
“சுத்த பைத்தியக்காரத்தனம்.எனக்கு உன்னை கொஞ்சமும் பிடிக்கலை.”
“உறுதியா தான் சொல்றியா பேபி?”
“ஆமா...ஆமா...ஆமா”
“கூல் அதுக்கு ஏன் கோர்ட் டவாலி மாதிரி மூணு தடவை சொல்ற?உன் வாய் தான் அப்படி சொல்லுது ஆனா என்னை பார்க்கும் உன்னோட கண்கள்ல காதல் தெரியுது.என்னை நீ தேடும் போது உன் கண்களில் எனக்கான தேடலை நான் உணர்ந்து இருக்கிறேன்.”
“மிஸ்டர் ப்ளீஸ் இப்படி தேவை இல்லாமல் ரம்பம் போடாதீங்க.எனக்கு வேண்டியது எல்லாம் ஒண்ணே ஒண்ணு தான்.என்னை தொந்தரவு செய்யாம விலகி போய்டுங்க”அவள் குரலில் அழுத்தம் இருந்தது.
“சரி பேபி”
அவன் ஒத்துக் கொண்டதும் நம்ப முடியாமல் அவனை பார்த்தாள். ‘இவன் அவ்வளவு நல்லவனா கிடையாதே! நாம சொன்னதும் கேட்கிற ரகம் இல்லையே இவன் ?’என்று அவள் மனதுக்குள் எண்ணிக் கொண்டு இருக்கும் போதே அவளது எண்ணத்தை மெய் ஆக்குவது போல தொடர்ந்து பேசினான்.
“நீ சொல்றதுக்கு நான் ஒத்துக்கிறேன் பேபி.ஆனா ஒரே ஒரு கண்டிஷன்அதுக்கு நீ ஒத்துகிட்டா நீ சொல்றதுக்கு நான் சம்மதிக்கிறேன்.”என்று கொக்கிப் போட்டான்.
“என்ன?”பார்வையை கூர்மையாக்கினாள் சங்கமித்ரா.
“இந்த வாரத்தில் மிச்சம் இருக்கும் மூணு நாட்களும் நீ என்னை தவிர்க்காமல் தினமும் ஒரு ஒரு மணி நேரமாவது என்னோடு பேசிக் கொண்டு இருக்க வேண்டும்.அது போதும்”
‘இது என்ன முட்டாள்த்தனம்’ என்ற ரீதியில் அவள் பார்த்துக் கொண்டு இருக்க பிரபஞ்சன் மேலும் தொடர்ந்தான்.
“ஒருவேளை இந்த மூணு நாளில் உனக்கு என் மேல் எந்த விதமான ஈர்ப்பும் வரலைன்னு நீ உன்னோட மனசாட்சிக்கு விரோதம் இல்லாம ‘உண்மையை’ மட்டும் சொன்னா அதுக்குப் பிறகு நான் உன்னை தொந்தரவு பண்ணலை.இட் இஸ் அ ப்ராமிஸ்”
“உங்களை நம்பி எப்படி நான் தனியே வருவது?” அவள் மனதில் அன்று கடற்கரையில் பிரபஞ்சன் அவளை அணைத்து ஆறுதல் படுத்தியது நினைவுக்கு வந்தது.
“நான் ரொம்ப நல்ல பையன் தான் செல்லம்.அது என்னமோ மாமனுக்கு உன் பக்கத்தில் வந்தா மட்டும் லேசா கிறுக்கு பிடிச்சுடுது.இந்த மூணு நாளும் நான் என்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கண்ட்ரோல் அஹ வச்சுக்கிறேன்.தப்பான எண்ணத்தோட உன்னை நெருங்க மாட்டேன்.சரி தானா?”
“நிஜமா தான் சொல்றீங்களா?”
“நான் பொய் சொல்ல மாட்டேன் பேபி...சில சமயம் சூழ்நிலை காரணமாக உண்மையை மறைத்து இருக்கிறேன்.ஆனா பொய் சொல்ல மாட்டேன்.என்னை நீ நூறு சதவீதம் நம்பலாம்” இதை சொல்லும் போது அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை அவன் தான் என்பதை இன்னும் அவளுக்கு சொல்லவில்லை என்ற காரணத்தினால் தான் அவனை அறியாமல் அப்படி வார்த்தைகள் வெளிவந்தது.
“டெய்லி எங்கே வரணும்?”உடனே ஒத்துக் கொண்டாள் சங்கமித்ரா.அதற்கு காரணம் இதை செய்தால் அதன்பிறகு இவன் தன்னுடைய வாழ்க்கையில் இருந்து விலகி விடுவானே என்ற எண்ணம் தான்.
“உனக்கு வசதியா ஏதாவது ஒரு பொது இடம்”அலட்டல் இன்றி பதில் அளித்தான் பிரபஞ்சன்.
“சரி...இப்போ நான் வீட்டுக்கு போறேன்.ரொம்ப நேரம் இருக்க முடியாது.”
“அப்புறம் பேபி.இன்னும் ஒரு சின்ன ரெக்வஸ்ட்”
‘என்ன’ என்று பார்வையாலேயே கேட்டாள் சங்கமித்ரா.
“இந்த மூணு நாளும் நீ இயல்பா இருக்கணும்.அதாவது ஒரு பிரண்டு கூட இருக்கிற மாதிரி.”
“நீ ஒண்ணும் எனக்கு பிரண்டு இல்லை”பட்டாசாக பொரிந்தாள்.
“உன் எதிரியும் இல்லை பேபி” என்று கண்களை மலர்த்தி குறும்பாக சொன்னான்.
“நான் கிளம்பறேன்.அம்மா தேடுவாங்க”அவனுடைய சிரிப்பில் மயங்க துடித்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு கிளம்ப தயாரானாள்.
“நாளைக்கு எங்கே பார்க்கலாம் பேபி.அதை சொல்லாமல் போறியே?”கெஞ்சலும்,கொஞ்சலும் கலந்து ஒலித்தது அவன் குரலில்.
“அது தான் எப்படியோ தகிடுதத்தம் எல்லாம் செய்து என்னோட போன் நம்பர் வச்சு இருக்கீங்களே.நாளைக்கு அதுக்கு மெசேஜ் பண்ணுங்க சொல்றேன்.கடைசியா ஒண்ணே ஒண்ணு.இந்த மூணு நாளில் உங்க நடத்தையில் ஏதாவது தப்பு இருந்தாலோ அல்லது மூணு நாளைக்கு பிறகும் எனக்கு உங்களை பிடிக்கலேன்னா நான் பாட்டுக்கு என் வழியில் போய்க் கொண்டு இருப்பேன்.நீங்க உங்க வழியில் போகணும்.புரிஞ்சுதா”
“நல்லா புரியுது பேபி.ஆனா அப்படி நடக்க வாய்ப்பு இல்லை.”திட்டவட்டமாக சொன்னான்.
“அவ்ளோ நம்பிக்கையா உங்க மேல”
“ஆமா நம்பிக்கை தான்.என் காதல் மேல”
“சரி நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தவள் அந்த தெரு முனையை தாண்டும் வரை தன் போக்கில் சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.
‘அவசரப்பட்டு இவனை தினமும் சந்திக்க ஒத்துக்கொண்டேனோ?இவன் சொன்னபடி நடந்து கொள்வானா? என்ற சந்தேகம் காலம் கடந்து அவளுக்கு தோன்றியது.ஆனால் தனக்கு வேறு எதுவும் வழி இருப்பதாகவும் அவளுக்கு தெரியவில்லை.போலீஸ் அதிகாரியான தன்னுடைய தந்தையிடமே நேரடியாக ஒப்படைத்த பிறகு கூட ஒரு சிறு காயம் கூட இல்லாமல் தப்பியவன் அவன்.அப்படிப்பட்டவனை பற்றி தன்னுடைய வீட்டில் சொல்வதால் வீண் பிரச்சினை தான் எழும்.அதற்கு பதிலாக இவன் சொல்வது போல மூன்று நாட்கள் தினமும் இவனை சந்தித்து ஒரு இரண்டு வார்த்தை பேசிவிட்டு அதன்பிறகு பிடிக்கவில்லை என்று சொன்னால் இவன் விலகிப் போய்விட போகிறான்.’என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
ஏதோ உள்ளுக்குள் ஒரு எண்ணம் உந்த திரும்பி அவன் இருந்த இடத்தை பார்த்தாள்.கண்களில் காதலை வாரி இறைத்தவாறு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் திரும்பி அவனை பார்த்ததும் கண்கள் பளிச்சிட ,எப்பொழுதும் போல அவளை நோக்கி குறும்பாய் ஒற்றை கண்ணை சிமிட்டி விட்டு பைக்கில் ஏறி அங்கிருந்து பறந்து விட்டான்.
கருத்துரையிடுக