முழுமதியாகுமோ என் வெண்ணிலா Tamil Novels 14

 

பௌர்ணமி மயக்கத்தில் இருந்து விழித்து இருந்தாள்.அங்கே நடந்த அத்தனை பேச்சுக்களையும் கேட்டு விட்டாள் என்பது அவளது வெளிறிய முகத்திலேயே தெரிய வேகமாக அவளின் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தான் பார்த்திபன்.

“பொம்மிம்மா...இப்போ எப்படி இருக்குடா....கொஞ்சம் தண்ணி குடி”என்று சொன்னவன் தண்ணீரை அவளுக்கு புகட்ட முயல இயந்திரமென அதை பருகி முடித்தாள் பௌர்ணமி.

பார்த்திபனின் உள்ளம் பதறியது.இப்படியான பேச்சுக்களை இவள் கேட்க வேண்டி வந்து விட்டதே...இவள் மனம் என்னவெல்லாம் பாடுபடுகிறதோ என்று நினைத்தவன் அவளின் தலையை இதமாக கோதி விட்டான்.

இவ்வளவு தூரம் நடந்த பிறகும் ராமனால் தன்னுடைய தோல்வியை ஒத்துக் கொள்ள முடியவில்லை.யாரோ ஒரு கேடு கெட்ட பெண்ணின் வயிற்றில் பிறந்தவளுக்காக மொத்த குடும்பமும் தன்னை உதாசீனம் செய்வதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.பௌர்ணமியை கதற வைத்தே தீர வேண்டும் என்ற வெறுப்புடன் தொடர்ந்து பேசினார்.

“மச்சான்.. யாரோ ஒரு கேடு கெட்ட பெண்ணுக்காக என்னையே நீங்க எல்லாரும் அசிங்கப்படுத்திட்டீங்க இல்ல...நான் சொல்றேன் எழுதி வச்சுக்கோங்க...இவ அம்மாவை மாதிரியே இவளும் தரம் கெட்டவளா தான் இருப்பா...அதனால் இப்பவே அவளை வீட்டை விட்டு...” என்று பேசிக் கொண்டே போனவரின் குரல் வளையை பிடித்து நெறித்து பாதியிலேயே பேச்சை நிறுத்தி இருந்தான் பார்த்திபன்.

“சொந்தக்காரங்களா போயிட்டீங்களேன்னு மேலே கை வைக்காம இருந்த ரொம்ப பேசறீங்க? எங்க பேசுறோம்...யார் முன்னாடி பேசுறோம்னு எந்த அச்சமும் இல்லாம பேசிக்கிட்டே போறீங்க...நான் நினைச்சா ஊருக்கு திரும்புறதுக்கு முன்னே உங்க மொத்த குடும்பத்தையும் காலி பண்ண முடியும்...செய்யட்டுமா? செஞ்சு காட்டட்டுமா?”என்று குரல் உயர்த்தி சிம்மக் குரலில் கர்ஜித்தவனைக் கண்டு ராமனின் முதுகுத்தண்டு சில்லிட்டது

“வேணாம் பார்த்திபா..விட்டுடு...ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம சொந்தக்காரங்க அவங்க...மன்னிச்சு விட்டுடு...”பார்த்திபனின் கரங்களை விலக்க முயன்றபடி ராஜன் எடுத்து சொல்ல வேண்டா வெறுப்பாக கைகளை விலக்கிக் கொண்டான் பார்த்திபன்.

“இனியொரு நீங்க என்னோட வீட்டுக்கு வரக் கூடாது...எங்க வீட்டு விசேஷத்தில் கூட இனி நீங்க முகம் காட்டக் கூடாது...அப்படி வந்தா அதுக்கு அப்புறம் உங்களுக்கு வாழ்க்கைன்னு ஒண்ணு இல்லாமலே போய்டும் என்று இறுகிப் போன குரலில் எச்சரித்தவன் அவரை ஒதுக்கித் தள்ளிவிட்டு பௌர்ணமியின் அருகில் போய் ஆதரவாக அமர்ந்து கொண்டான்.

“அம்மா நான் இவளை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்...இந்த பொங்கல் வைக்கிறது எல்லாம் இன்னொரு நாள் செஞ்சுக்கலாம்”என்று சொல்லி கிளம்ப முயன்றவனை தடுத்து விட்டாள் பௌர்ணமி.

“எனக்கு ஒண்ணும் இல்லை...இருந்து பொங்கலை வச்சு முடிச்சுட்டே கிளம்பலாம்”

“விளையாடுறியா நீ?தலையில் அடிபட்டு காயமாகி இருக்கு..உடம்புல அங்கங்கே சிராய்ச்சு இருக்கு...இதோட எப்படி பொங்கல் வைக்கிறது?”

“இல்லை...கல்யாணம் ஆன பிறகு முதல் தடவை வந்து இருக்கேன்..வெறுமனே திரும்பிப் போனா எனக்கு கஷ்டமா இருக்கும்”

“சொன்னா கேளேன் பொம்மிம்மா”என்றான் கெஞ்சலாக

“ஏன்...என்னைப் போல ஒருத்தி உங்க குலதெய்வ கோவிலில் பொங்கல் வைக்க தகுதி இல்லாதவன்னு நினைக்கறீங்களா?”கண்களில் கண்ணீர் வழிய கேட்டவளை இழுத்து அணைத்து ஆறுதல் கூறத் துடித்தவன் சூழ்நிலை கருதி அப்படியே அமைதியாக இருந்தான்.

“உனக்கு உடம்பு சரியில்லையேன்னு சொன்னா...இப்படி அடம்பிடிக்கறியே  சரி பொம்மிம்மா...வேணும்னா இப்படி செய்யலாம்...பொங்கல் வைக்கிறது எல்லாத்தையும் அம்மா பார்த்துப்பாங்க...நீ உன் கையால அரிசி மட்டும் போடு”

“தேங்க்ஸ்” என்றாள் முகம் மிளிர...

அவளின் முகத்தையே மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான் பார்த்திபன்.

‘எவ்வளவு ஏக்கம் உள்ளுக்குள் இருந்து இருந்தால் இப்படி மகிழ்ந்து போவாள் அவள்’என்று எண்ணியவாறே அவளைக் கைத்தாங்கலாக பிடித்து அவள் பொங்கல் செய்வதற்கு உதவி செய்தவன் அதன் பிறகு மற்றவர்கள் கிளம்பும் முன் அவளை தன்னுடைய ஜீப்பில் அழைத்துக் கொண்டு போனான்.

உடன் கூடவே வரத் துடித்த பாஸ்கரை ஒற்றைப் பார்வையில் தடுத்து நிறுத்தி விட்டான்.

பாஸ்கருக்கு உள்ளுக்குள் பயம்...தவிப்பு எல்லாம் கலந்து இருந்தது.தங்கைக்கு விருப்பம் இல்லாத திருமணம் அவளது வாழ்வு ஒழுங்காக இருக்குமோ இல்லையோ என்ற தவிப்பு அவனை அதிகமாக ஆட்டி வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.முதல் நாள் பார்த்திபன் தாலி கட்டியதில் இருந்து அவனால் இயல்பாக சுகன்யாவிடம் கூட பேச முடியவில்லை.

தங்கையின் வாழ்க்கை நன்றாக இருக்குமா என்ற பயமே அவனை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.ஆனால் இப்பொழுது அவளுக்கு ஒரு ஆபத்து என்றதும் நொடியும் தாமதிக்காமல் காட்டை நோக்கி ஓடிய பார்த்திபனைக் கண்டதும் பாஸ்கருக்கு ஓரளவிற்கு தெளிவு வந்து இருந்தது.

அவளை கைகளில் ஏந்திக் கொண்டு தன்னிடம் கொடுக்க மறுத்து தானாக அவளை சுமந்து கொண்ட விதமும்,அவளைத் தரக் குறைவாக பேசிய ஒருவரை அடிக்கப் பாய்ந்த அவனது ரௌத்திரமும் கண்டு அவனுக்கு திருப்தியாகத் இருந்தது.

தங்கை வாழ்க்கையை நன்றாக வாழுவாள் என்று நம்பத் தொடங்கியதுமே அவன் முகத்தில் ஒரு நிறைவு வந்து இருந்தது


Post a Comment

புதியது பழையவை